“என்ன சொல்லிட்டிங்கய்யா?! பணத்தை குடுங்க, உங்க பேச்ச நா மறுக்கல” பணத்தை கொடுத்த பின்னரே டிக்கெட்டை வாங்கி கொண்டார் சாமிகண்ணு.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான மற்றொரு பேருந்தில் ஏறிகொண்டார்.
பேருந்திலிருந்து இறங்கி அந்த வங்கியை நோக்கி கால்கள் நடக்க மனமோ ஓடியது; கடன் கிடைத்துவிடும் என்று ஒருபுறமும் அப்படி கிடைக்காவிட்டால் என்ன செய்வதென மறுபுறமும் மனம் நிற்காமல் ஓடியது.
அந்த கூட்டுறவு வங்கியின் பெரிய கண்ணாடி கதவை சாமிகண்ணு வெளியிருந்து தள்ளவும் உட்புறமாக ஒருவர் அதை இழுக்கவும் சரியாக இருந்தது. வங்கியிலிருந்து வேகமாக வெளியில் வந்து கொண்டிருந்தவர் தன் மீது மோதாமலிருக்க சாமிகண்ணு சற்றே இடபுறமாக சரிந்தார். நாகரீகம் கருதி எதிரே வந்தவர், “சாரி!” சாமிகண்ணுவை ஏறிட்டவரின் முகம் ஓரே ஒரு கணம் மலர்ந்தது.
அவரை அடையாளம் கண்டுகொண்ட சாமிகண்ணு ‘எங்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டயாடா ராமு?’ மனதில் ஆர்வம் பொங்க அவரை ஏறிட்டார்.
ராமுவோ இறுகிய முகத்தோடு அவரசரமாக அங்கிருந்து அகன்றார். ராமுவின் முக மாற்றத்திலும் அவசர நடையிலும் மனமுடைந்த சாமிகண்ணு அப்படியே உறைந்து நின்றார்.
“வழில நிக்காதீங்க பெரியவரே” என்று வங்கியின் வாயில் காவலாளி பேசியபோது தான் தன்னிலை அடைந்தார்.
இருக்கும் இடத்தை உணர்ந்தவருக்கு வந்த காரியம் நினைவு வரவும் உடனடியாக வங்கியினுள்ளே சென்று கடன் பிரிவில் தன்னை இன்று வரசொல்லி இருந்ததை தெரியபடுத்தி விட்டு காத்திருந்தார்.
வாடிக்கையாளர்களுக்காகப் போட பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவரின் மனதினை ராமுவின் நினைவுகள் ஆக்கிரமித்தன.
எந்த கவலையையும் அறியாத பால்ய வயதிலிருந்து சாமிகண்ணுவும் ராமமூர்த்தியும் நண்பர்கள். அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களின் நட்பு அவர்கள் வளர்ந்து காளையர்களான போதும் தொடர்ந்தது. அரசியூரில் இவர்களின் நட்பை அறியாதவர்கள் இல்லையெனும் அளவிற்கு ஆழமான அழகான பிணைப்பு அவர்களை இணைத்திருந்தது.
யார் கண் பட்டோதோ? நண்பர்களிடையில் கைகலப்பு ஏற்பட்டு பிரியும் நிலையும் வந்தது.
சிறு பிராயத்திலிருந்து ‘சோறு போடுற பூமி’ என்று சாமிகண்ணுவின் தந்தை அவரின் மனதில் உருவேற்ற, விவசாய நிலத்தின் மீதும் விவசாயத்தின் மீதும் பெரும் மரியாதையும் ஈடுபாட்டையும் அவருள் ஏற்படுத்தியிருந்தார். ஆதலால் விவசாயத்தை சுலபமாக கற்று கொண்டார் சாமிகண்ணு.
ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நாட்டமிருந்ததால் தந்தையின் வார்த்தையையும் மீறி விவசாயத்தை புறக்கணித்தார்.
“ஒரே புள்ளைன்னு செல்லங்குடுத்து வளர்த்திட்டே… இப்ப அவ போக்கே சரியில்ல… தொழில் பண்ண போறேன்னு சொல்லிகிட்டு திரியுது… அவனுக்கு ரெண்டு நல்ல வார்த்த சொல்லி கழனிக்கு வர சொல்லுயா.. உன்னை போல எம்பையனை பொறுப்பா மாத்த கூடாதா?” ராமமூர்த்தியின் தந்தை சாமிகண்ணுவை நாடினார்.
“வெசனத்தை விடுங்க மாமா… அவங்கிட்ட நா பேசுறே”
என்ன தான் உயிர்த்தோழனாக இருந்தாலும் சாமிகண்ணுவின் அறிவுரையை ராமுவின் மனம் ஏற்கவில்லை.
தந்தை, நண்பன் மற்றும் சொந்த பந்தங்களின் நெருக்கடியால் ராமு உடனடியாக தொழில் தொடங்கும் முடிவுக்கு வந்தார். அவரின் ஏழ்மை அதற்கு தடையாக இருக்க அவரின் பரம்பரை சொத்தாக இருந்து வந்த அரைக்காணி நிலத்தை விலைப் பேசினார்.
அரசியூர் முழுவதும் காட்டுத்தீயென இந்த செய்தி பரவியது. ராமுவின் பெற்றோர் தங்கள் மகனின் பிற்காலம் பாழாகிவிடுமே என்று கலங்கி புலம்பினர்.
நண்பனின் பெற்றோர் துயரும், யார் பேச்சையும் கேட்காமல் நிலத்தை விற்று விட்டானே என்ற ஆதங்கமும் ஒன்று சேர பொங்கினார் சாமிகண்ணு. நிலத்தை விற்ற பணத்தோடு வீட்டுக்கு வந்த ராமுவை வாசலில் வழிமறித்து கேள்வி கேட்டார். பேச்சு வார்த்தை முற்றிய கட்டத்தில் சாமிகண்ணு ராமுவை அறைந்திருந்தார். வேடிக்கை பார்த்திருந்த ஊர் மக்கள் ராமுவை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அதன் பிறகு ராமுவை இன்று தான் வங்கியில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. நண்பனின் பாராமுகம் அவரை வாட்டியது.
“சாமிகண்ணு!” வங்கி அதிகாரி ஒருவன் மூன்றாம் முறையாக கூவினான்.
சட்டென பழைய நினைவுகளிலிருந்து மீண்டவர், “என்ன தம்பி?” என்றார்.
“என்னன்னா கேட்ட? நல்லா கேட்ட போயா… எத்தனை முறை உன் பேரை கூப்பிடுறது… எல்லா எந்நேரம்…. எனக்குன்னு வந்து வாக்கிதுங்க” தலையில் அடித்து கொண்டான்.
“மன்னிச்சிருப்பா… ஏதோ ஞாபக்கத்துல இருந்துட்ட… அதுக்காக இப்படி வயசுக்கு கூட மரியாத குடுக்காம பேசுறுயே தம்பி?”