(Reading time: 32 - 63 minutes)

2017 போட்டி சிறுகதை 142 - மனைவி ஒரு மந்திரி - ராசு

This is entry #142 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - ராசு

Wife

வளை நினைக்கையில் மட்டுமல்ல அவள் பெயரை யாராவது உச்சரித்தாலே அவனுக்குள் கொலைவெறி மூண்டது.

அதுவும் இப்போது அவனிடம் துக்கம் விசாரிப்பது போல் வழியில் தென்படுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமாளித்து பதில் சொல்லும்போது வெறி அதிகமாகிறது.

ஆனால் பிள்ளைகளுக்காக பொறுத்துப்போகிறான்.

அவள் மாயா.

அவனுடைய மனைவி.

கூட நடந்து வரும் மகளைப் பார்க்கையில் வேதனை நெஞ்சை அழுத்துகிறது.

ஆனால் அவள் முகத்தில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

உணர்ச்சிகளை துடைத்த முகம். பத்து வயதில் இது அதிகம்.

குழந்தைத்தனத்தை மறந்து மகள் பெரிய மனுசியாக மாறி வருவதைப் பார்க்கும்போது அவனால் வேதனை தாள முடியவில்லை.

அப்போது எதிரே வந்த வயதான பெண்மணி ஒருவர் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

“ஏன்டா ராகவா! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?”

அவர் எதற்காக இந்த கேள்வி கேட்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது.

“பெண்ணும்பெரிய பொண்ணு. அவ தலைமுடியை ஒட்ட வெட்டிட்டு வந்திருக்கியே. இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய மனுசியாயிடுவா. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டே நீ.”

அவனா யோசிக்கவில்லை. அவனுக்கே தெரியாதே. சலூனுக்குச் செல்லும் வரையிலும் மகள் முடிவெட்டிக்கொள்ளப்போகிறாள் என்றே அவன் அறியவில்லையே.

“அது வந்து பெரியம்மா....” ராகவன் இழுத்தான்.

தன்னால் தந்தை திட்டு வாங்குவது மகளுக்குப் பொறுக்கவில்லை.

தந்தை முடிக்குமுன் இடைமறித்தாள்.

“இல்ல அப்பத்தா. எனக்கு படிக்கும்போது எழுதும்போதெல்லாம் முடி குத்துது. அதுதான் அப்பாக்கிட்ட அடம்பிடிச்சு முடி வெட்டிக்கிட்டேன்.”

அதற்கும் அவனுக்குத் திட்டு விழுந்தது.

“பொம்பளைப் புள்ளைக்கு இவ்வளவு செல்லம் கொடுத்தா சரிவராது.” என்று அங்கலாய்த்துக்கொண்டே சென்றார் அந்த பெண்மணி.

ராகவனுக்குள் கோபம் பொங்கியது.

‘அது என்ன? பொம்பளைப் பிள்ளைக்கு மட்டும் தனிக்கட்டுப்பாடு. அவர்கள் எதில் குறைந்தவர்கள்.’

அவனது பொறுமலை கேட்கும் பொறுமை இல்லாது அறிவுரை சொன்னதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக அந்த பெண்மணி சென்றுவிட்டார்.

அவனுக்கு இப்போதைக்கு வீட்டுக்கு செல்லும் எண்ணம் இல்லை. அவனுக்குத் தனிமை வேண்டியிருந்தது. மகளிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும்.

அவனுக்கு முடிவெட்டும் இடத்தில் நடந்தது கண் முன்னே வந்தது.

அவன் வழக்கமாக செல்லும் கடைதான். முடிதிருத்தும் பையன் சிநேகத்துடன் சிரித்தவாறே வரவேற்றான்.

எப்போதும் கூட வராத மகள் இன்று வந்தது அவனுக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. இவர்கள் அல்லாது வீட்டில் இருக்க பயந்துகொண்டே தங்களோடு கிளம்புகிறாள் என்று அழைத்து வந்திருந்தான்.

‘ம்ஹூம்.’

அவனுக்குப் பெருமூச்சு வந்தது.

வீடுன்னா குழந்தைகளுக்கு பாதுகாப்பையும் சந்தோசத்தையும் தரனும். அதுவும் தாய் இருக்கும் போது கட்டாயமாய் நிம்மதியைத்தான் தரனும்.  ஆனால் அவனது பிள்ளைகளுக்கு தாய் இருக்கும் போது வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.

பையனுக்கும் அவனுக்கும் முடி வெட்டிய பிறகு கிளம்ப எத்தனிக்கையில்தான் மகள் ஆதிரை தயக்கமாக தானும் முடி வெட்டிக்கொள்வதாக கூறினாள்.

அவனுக்கு ஆச்சர்யம்.

பெண் குழந்தைகளுக்கே உரிய நீண்ட கூந்தல் ஆசை அவளுக்கும் இருந்தது. சிறுவயதில் தன் தாய் மாயாவை தனக்கு பின்னால் நிற்க வைத்துக்கொண்டு அவளது முடியை தனது முன்பக்கம் போட்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள்.

“அப்பா! எனக்கு எவ்ளோ நீள முடி.” என்று அவனையும் அழைத்துக் காண்பித்து ஆர்ப்பரிப்பாள்.

சில நேரங்களில் தலைக்குளித்த பிறகு பெண்கள் துவாலையைத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொள்வது போல் கட்டிக்கொண்டு முன்பக்கம் போட்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள்.

விவரம் தெரிந்த பிறகு அவள் முடி வெட்டவே அனுமதிக்கவில்லை.

“எனக்கு அம்மா மாதிரி நீள முடி வேண்டும்.” என்று உறுதியாய் சொல்லிவிட்டாள்.

அப்படிப்பட்ட மகள் இன்று தானே முன்வந்து முடிவெட்டிக்கொள்கிறேன் என்றால்? அதுவும் அவள் ஆசைப்பட்ட மாதிரியே நீள முடி வளர்ந்துவிட்ட இந்த நிலையில்.

அவளது பத்து வயதுக்கு அவளது நீண்ட முடி அதிகமே.

பார்க்கும் எல்லோரும் வியப்பில் கண்விரிப்பர்.

மகள் விளையாடுகிறாளோ என்று அவளது முகத்தைப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.