அவளது முகம் உண்மை பூசியிருந்தது.
“அண்ணே! எனக்கு பாய்கட் பண்ணிவிடுறீங்களா?”
கேட்டவாறே நாற்காலியில் ஏறி அமர்ந்த மகளை தடுக்க முடியாமல் திகைத்து நின்றான்.
ஆதிரையின் முகத்தில் தீவிரம் இருந்தது.
“ஸ்ஸ்ஸ். ஆஆஆ!”
முடிவெட்டும்போது அவளது குரல் முனகலாய் வெளிப்பட்டது.
“ஐயோ! என்ன பாப்பா இது? இவ்வளவு பெரிசா புடைச்சிருக்கு?”
முடிவெட்டும் பையன் பதட்டமாய் கேட்டான்.
“தம்பி கூட விளையாடும்போது அடிபட்டுடுச்சு அண்ணே.”
அவளது பதில் தயக்கமாய் வெளி வந்தது.
“பார்த்து விளையாடக்கூடாதா பாப்பா?”
பேசிக்கொண்டே அவனது கடமையயைச் செய்தான்.
மகளது முகத்தைப் பார்க்க பார்க்க அவன் மனம் பரிதவித்தது.
அவள் உண்மையைச் சொல்லவில்லை என்று புரிந்தது.
அவளுக்குப் பொய் சொல்லி பழக்கமில்லை. நல்ல குணங்களுடன்தான் பிள்ளைகளை வளர்த்திருந்தாள் மாயா.
இப்போதுதான் அவள் குணம் மாறிவிட்டது.
முடிவெட்டிவிட்டு வந்து கொண்டிருக்கும் வழியில் நடந்ததுதான் உங்களுக்கு தெரியுமே.
அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
மகளை அருகில் அமர வைத்து அவளது தலையைப் பார்த்தான்.
தலையில் சிறிதாக புடைத்து அதன் மேல் காயமாக வேறு இருந்தது.
“என்னடா நடந்தது?” வாஞ்சையுடன் கேட்டான்.
“அதான் சொன்னேனேப்பா. தம்பி கூட விளையாடும்போது அடிபட்டுடுச்சு.”
மீண்டும் சமாளிப்பாய் பதில் கூறிய மகளை வேதனையுடன் பார்த்தான்.
அவள் அவன் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
மகனது முகத்தில் தெரிந்த பாவமும் மகள் உண்மையைச் சொல்லவில்லை என்று காட்டியது.
“நான் திட்டமாட்டேன். என்ன நடந்ததுடா?” வலியுறுத்தினான்.
மகள் தயங்க மகன் சஞ்சய் உண்மையை போட்டுடைத்தான்.
“காலையில் ஸ்கூலுக்குப் கிளம்பறப்போ ஏழு கழுதை வயசாகுது. இன்னும் தலை பின்னத் தெரியலையான்னு அம்மா குட்டிட்டாங்கப்பா.”
மகளை தனது மார்போடு அணைத்துக்கொண்டான்.
அவள் கண்ணீரால் மார்பு நனைந்தது.
பிள்ளை எப்படி வலியைப் பொறுத்துக்கொண்டாளோ. அவன் கவனிக்கவில்லையே. காலையில் தானும் அலுவலுக்குக் கிளம்பி பிள்ளைகளையும் தயார்படுத்த வேண்டியிருந்ததால் எதையும் கூர்ந்து கவனிக்கவில்லை.
மௌனமாய் கண்ணீர் வடித்த மகளைத் தட்டிக்கொடுத்தான். இப்போதுதான் அடிபட்டது போல் அழுகிறாள். ஏனெனில் அவளது உடலில் பட்ட காயத்தை விட அம்மா இப்படி செய்துவிட்டாளே என்று மனதில் பட்ட அடிதான் பெரிதாக தோன்றியது.
சஞ்சயும் தனது தமக்கையின் வேதனையைக் குறைக்க எண்ணி மறுபக்கம் அமர்ந்து அணைத்துக்கொண்டான்.
குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படனும்னு பெரியவங்க சொல்வாங்க. கையில் மோதிரத்தோடே மகளைக் குட்டியிருக்கிறாள்.
அந்த அளவுக்கு அவளுக்கு ஆங்காரம் வருவதற்கு இந்தச் சின்னப் பெண் என்ன செய்தாள்?
“அப்பா! அதான் நான் அன்னிக்கே சொன்னேன். நாம வேற வீட்டுக்கு போயிடலாம். வேற புது அம்மாவை வாங்கிக்கலாம்னு சொன்னேன்.”
ஆறுவயது சஞ்சய் தான் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் தாயை வெறுத்துப் பேசுகிறான் என்றால் அந்த அளவிற்கு கொடுமைக்காரியாய் மாறிவிட்டாள்.
“சரி! நீங்க போய் விளையாடுங்க.”
தயங்கிய பிள்ளைகளை அனுப்பிவிட்டான்.
மகன் இப்போது சொன்ன வார்த்தைகளை, அவனது மனதை தினமும் அறுத்துக்கொண்டிருக்கும் வார்த்தைகளை கன்னத்தில் தாயின் கை அச்சு பதியுமாறு அறை வாங்கி சுருண்டு விழுந்த அன்றுதான் அழுகையோடே சொன்னான்.
விளையாடும் பிள்ளைகளை பார்த்தவன் பிறகு இலக்கின்றி வெறித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
திருமணமாகி இத்தனை வருடங்கள் மாயா இப்படியில்லை. சின்னச் சின்ன சண்டைகள் வரும். அப்படி இல்லை என்றாலும் கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்காது. வாழ்வில் ஒரு சுவாரசியமும் இருக்காது.
ஆனால் வீட்டில் நடந்த சொத்துப் பிரிவினைக்குப் பிறகுதான் அவளது மற்றொரு தோற்றம் தெரிந்தது.
அவனது சகோதரர்கள் ஏமாற்றினால் அவன் என்ன செய்வான்?
அவனும்தானே ஏமாந்து போய் நிற்கிறான்.
சரி. அவனுக்கு திறமையில்லை. அதனால் அவன் மேல் கோபப்படுவது நியாயம். இந்த பிள்ளைகள் என்ன செய்தனர்?