சிறுகதை - உனை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்- புவனேஸ்வரி கலைசெல்வி
ஹாய் ப்ரண்ட்ஸ்..! இந்த தலைப்பை படிச்சதுமே முகத்தில் லேசாய் குறுநகை வந்ததா? இந்த பாட்டு பிடிக்குமா உங்களுக்கு? காதலர்தினம் படத்துல “ரோஜா ரோஜா” இந்த பாடல் அனேகமா நம்ம எல்லாருடைய ஃபோன்லயும் இருக்கும்ன்னு நம்பறேன். அந்த அளவுக்கு அழகான பாடல்.
அதுவும் இந்த வரிகள்,
“ உனை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உனை வேறு கைகளில் நான் தரமாட்டேன்.. நான் தரமாட்டேன்
நான் தரமாட்டேன்”
கேட்கும்போது ஒரு சின்ன குழந்தை, “ இது என் பொம்மை.. நான் யாருக்குமே தர மாட்டேன்”னு சொல்லுற மாதிரி கியூட்டா இருக்கும். ஒரு குழந்தைக்கு பொம்மை மீது எப்படி பிடிவாதமான உரிமையுணர்வு இருக்கோ அதே மாதிரி நம்ம எல்லாருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கத்தான் செய்யுது. சிலர் குழந்தையாக இருக்கோம், சிலர் அந்த குழந்தை கையில இருக்குற பொம்மையாக இருக்கோம்.
சரி கதையை ஆரம்பிக்கிற முன்னாடி, எல்லாரும் உங்க வலது கையை, உங்க நெஞ்சத்தின்மீது வெச்சு ஒரு விஷயம் யோசிச்சு பாருங்களேன்.
லைஃப்ல யாரு மேலயாவது அதிகமாய் உரிமையுணர்வு வந்திருக்கா? அந்த உணர்வினால் பொறாமை வந்ததுண்டா? அவன்/ அவள் எனக்கு நெருக்கமாய் இருக்காங்களோ இல்லையோ, ஆனால் அவங்களுக்கு யாராவது நெருக்கமாய் இருந்தால் நான் பொறுத்துக்க மாட்டேன்னு நினைச்சிருக்கீங்களா? இந்த அதீத உரிமையுணர்வினால் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தர் மேல கோபம் வந்ததுண்டா?
ஏதாச்சும் ஒரு சூழலில், “ நீ எனக்கு மட்டுமே சொந்தம்”ன்னு வார்த்தைகளால், செயலால் அல்லது பார்வையால் உணர்த்தி இருக்கீங்களா? இந்த உணர்வினால் சிரிச்ச தருணங்கள் கம்மியாகத்தான் இருந்துருக்கும். ஆனால் அழுத தருணங்கள் அதிகமாய் இருந்திருக்கும்..! இதை படிக்கும்போது அந்த வலியை உணர முடியுதா?சரி அந்த வலியை மறந்து இப்படி கற்பனை பண்ணி பார்ப்போம்.
நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர், இவங்கத்தான் நம்ம உலகம்ன்னு சொல்லிக்கிற அளவு ஸ்பெஷலான ஒருத்தர், நம்ம மேல உரிமை கொண்டாடினால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? “ நான் உனக்கு முக்கியம் இல்லையான்னு” பிரியத்துடன் அவங்க கேட்கும்போது மனசுக்குள்ள அன்பெனும் சாரல் வீசாதா? உலகத்தில் உள்ள அனைத்து மலர்களும் ஒரே நேரத்துல நம்ம மனசில் பூக்காதா?
ஆக, இந்த “உரிமையுணர்வும், பொறாமையும்”மிதமான அளவில் இருக்கும்போது வாழ்க்கை நிச்சயம் ரசிக்கும்படித்தானே இருக்கும் ? அதை எடுத்துச் சொல்லும் கதையே இது ! இதுல சில அதிசய விஷயங்கள் இருக்கு. அவை முழுக்க முழுக்க கற்பனையே! முடிஞ்ச அளவிற்கு யாரையும் குழப்பாமல் கதை சொல்ல முயற்சிக்கிறேன். வாங்க கதைக்குள் போகலாம்!
புவனம்! மனிதர்கள்,விலங்குகள், தாவரங்கள், கிறுமிகள், இயற்கை, செயற்கையென எண்ணிலடங்கா ஜீவன்களின் மர்மங்களின் வசிப்பிடம் இது! இந்த புவனம் நாம் அறிந்த ஒன்றுதான். நமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். இணையத்தை தட்டினால் அடுத்த நிமிடமே இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், நாம் அறியாத நமது அறிவுக்கு அப்பாற்பட்ட உலகம் இருக்கிறதா? இருந்தால்?
இதோ பூமியை விட்டு பல மடங்கு தூரத்தில் கண்கூசிடும் ஒளியுடன் இருந்தது அந்த பிரதேசம். அங்கு மானிடர்களுக்கு வேலை இல்லை ! காற்று,நெருப்பு, நீர் ,உணவு எதையுமே அங்கு காண முடியாது. அங்கு காண்பதற்கென்று எந்தவொரு உருவமும் இல்லை ! எல்லாம் புகை வடிவம்தான். ஆம், மானிடர்கள் ‘ஆவி’என்ற பெயரில் குறிப்பிடும் உருவத்தில் ஒவ்வொரு வண்ணத்தில் காட்சியளித்தன, அப்புகைகள்.
அந்த புகைகளின் பெயரே உணர்வுகள். அது உணர்வெனும் உலகம். கோபம், மகிழ்ச்சி, அன்பு, பொறாமை, ஏமாற்றம் என பற்பல உணர்வுகளும் குணங்களும் குழுமியுள்ள உலகமது. இவைத்தான் மானிடர்களை ஆட்டிப்படைக்கின்றன என்றாலும்கூட, மானிடர்களின் மீது இவை முழு ஆட்சியை செலுத்திட கூடாது என்பதற்காகத்தான் இந்த உலகம் நம் உலகத்தை விட தூரமாய் உருவாக்கப்பட்டிருந்தது.
அந்த உலகத்தில் இப்போது கடும் விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு புறம் அன்பெனும் உணர்வு, இன்னொரு புறம் அதீத உரிமையுணர்வு வித்திடும் பொறாமை என்ற உணர்வு. இரு உணர்வுகளுக்கும் இடையில் கடுமையான விவாதம் நடந்துகொண்டிருந்தது.
“ மானிட உலகில் சந்தோஷமும், பிணைப்பும் நிலைத்திருப்பதற்கு தான் மட்டுமே காரணம்”என்ற விவாதம் அது ! கனிவே உருவாகிய அன்பு, பிடிவாதமாய் போராடவில்லை எனினும், “பொறாமை ஒரு உறவுக்கு பாலமாய் அமையாது” என்ற கருத்தை தீர்க்கமாய் முறையிட்டது. கர்வமே உருவாய் இருந்த பொறாமையோ, “ நான் மூட்டிடும் கலகம் தான் மானிடரை ஒருவரின்பால் ஒருவரை ஈர்க்கிறது” என்று வாதிட்டது.