அவன் ஓவர் குஷியாக இருக்கும்போது ஸ்வாரகாவை ஜிலேபி என்று அழைப்பது வழக்கம். ஆதலால் அவன் விளையாட்டிற்குத்தான் அப்படி கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அவள். எனினும், தனக்கு தோன்றிய பதிலை உடனே அவனிடம் உரைத்தாள்.
“ ஒருவேளை நீ சந்தேகப்பட்டா நான் செத்துருவேன்!”
“ஏய்??”
“ரொம்ப ஃபீல் பண்ணாதே.. எனக்கு ஜெயில்ன்னா பயம் ப்பா.. எப்படியும் சந்தேகப்பட்டதற்காக உன்னை கொன்னுருப்பேன். அதுக்காக எனக்கு தண்டனை கிடைக்கும்ல? ஜெயிலுக்கு போறதுக்கு பதிலா சூசைட்டே பெட்டர்” என்றவள் இல்லாத தனது கோலரை தூக்கிவிட்டு கொள்ள, தனது இன்னுயிரை காப்பாற்றிக் கொள்ளும் நல்லெண்ணத்தில் வாயை மூடிக் கொண்டு பயபக்தியுடன் காரை ஓட்டினான் ராகவன்.
“ பப்பு இந்த வளையல் போட்டுக்கோ! தலையில பூ ரொம்ப பாரமா இருக்கா? உனக்கு ஜூஸ் கொண்டு வரவா?” மணமகள் அறையில் ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டிருந்த அத்தை மகனை புன்னகையுடன் பார்த்தாள் யாமினி. மணமகள் அறையில் பெண் வீட்டாரே அதிகமாய் இருந்ததால் யாருமே அவர்களைப் பார்த்து புருவம் உயர்த்தவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின் சந்தோஷத்தில் திளைத்திருந்தான் நெடுஞ்செழியன். தனது ஒருதலைக் காதல் மறுக்கப்பட்டதும் சில மாதங்களாய் தேவதாஸாய் சுற்றிக் கொண்டிருந்தான் அவன். இனி திருமணமே வேண்டாம் என்று அவன் எடுத்த முடிவைக் கண்டு யாமினியின் பெற்றோரும் கலங்கி போயினர். இனி இந்த வீட்டில் திருமணமே நடக்காதா? என்று பெரியவர்களின் மனம் ஏங்கிட அவர்களின் சோகத்தை தீர்ப்பதற்காகவே யாமினிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான் அவன்.
“ஏன்டா, உன் கல்யாணத்தை நினைச்சு வீட்டில் கவலைப்பட்டால் நீ என்னையே பகடைக்காயாய் யூஸ் பண்ணுறீயா?” என்று யாமினி விளையாட்டாய் எதிர்த்தாலும், அவனது விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை அவள். தனது உடன் பிறந்த சகோதரியின் திருமணம் போல செழியன் துள்ள, இதை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாமல் கொதித்து கொண்டிருந்தான் மணமகன் யாழமுதன்!
“யாழமுதன் வெட்ஸ் யாமினி”. அந்த திருமண மண்டபத்தின் அலங்காரத்தை பார்த்த ராகவன் தன் மனைவியிடம், “ உன் ப்ரண்டுக்கு யாழினின்னு பேரு வெச்சிருந்தால் இன்னும் பொறுத்தமா இருந்துருக்கும்ல?” என்று கூறினான்.
“ அதுக்கு பதிலாக மாப்பிள்ளை யமன்னு வெச்சிக்கலாமே” என்று ஸ்வாரகா கூற மனைவிக்கு ஹை5 கொடுத்தான் ராகவன்.
“போதும்டா.. கூட்டம் ஜாஸ்தியா இருக்கு .. நம்மள பார்த்து கண்ணு வெச்சிற போறாங்க.. கொஞ்சம் அடக்கி வாசிப்போம்” என்று ஸ்வாரகா கூறிட அடுத்த நொடியே அமைதியாகினான் ராகவன்.
“ பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று ப்ரோகிதர் குரல் கொடுக்க, யாமினியை இதர உறவினர்களோடு கைப்பிடித்துக் கூட்டி வந்தான் நெடுஞ்செழியன். அவனை பார்த்ததுமே “ இவன்தான் செழியனா?” என்று பார்வையால் ராகவன் வினவ, அதை ஆமோதித்தாள் ஸ்வாரகா. இருவருமே உடனே மணமகனின் முகத்தைப் பார்க்க, யாழமுதனின் முகத்தில் அக்னி ஜ்வாலையே தெரிந்தது. யாமினியை யாழமுதனின் அருகில் அமர வைத்த செழியன் , மேடையில் இருந்து இறங்கினான் . மணமக்களை கீழிருந்து ரசிக்க வேண்டும் என்றெண்ணி இறங்கிட, ஒரு நொடி அரங்கமே ஸ்தம்பித்து நின்றது.
மந்திரம் சொன்ன ப்ரோகிதரை தொடங்கி, அந்த அரங்கில் இருந்த ஸ்வீட்டை திருட முயற்சித்த எறும்புவரை அனைத்து ஜீவன்களும் ஸ்தம்பித்து நிற்க, அன்பும், பொறாமையும் உணர்வுகளின் தலைவனுடன் அந்த இடத்திற்கு வந்தன. ஸ்வாரகா- ராகவன், யாமினி- யாழமுதன் இரு ஜோடிகளையும் சுட்டி காட்டி பேசத்தொடங்கியது உணர்வுகளின் தலைவன்.
“ ஸ்வாரகா- ராகவன் அன்பே அடித்தளமாய் கொண்ட தம்பதியர், யாமினி – யாழமுதன் இவர்கள் பொறாமையின் தீட்சன்யத்தில் நிம்மதியை தொலைப்பவர்கள். நீங்கள் உங்களது சக்தியை இவர்கள் மீதுதான் பயன்படுத்த வேண்டும். நிபந்தனைகள் நினைவில் இருக்கட்டும் . பூமியில் இன்றைய நாள் முடிய இன்னும் ஐந்து மணி நேரங்களே மிச்சம் உள்ளன” என்று தலைவர் கூறும்போதே,
“ஆகையால், எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று கூறிய பொறாமை உடனே ஸ்வாரா- ராகவனின் எதிரில் நின்றது. தலைவர் சொன்ன விதியின்படி அது தனது முழு சக்தியை ஒருவரின் மீது பயன்படுத்த முடியாது என்பதினால், உடனே தன் சக்தியை இரண்டாக பிரித்து இருவரின் உள்ளத்திலும் புகுந்து கொண்டது.
“முக்கியமான கட்டளையை கூறும் முன் பொறாமை அவசரப்பட்டுவிட்டதே!” என்று தலைவர் கூறிட அன்பு வெகுண்டது.
“ அது என்ன கட்டளை தலைவரே? என்னிடம் சொல்லுங்கள் ..என்னால் இயன்றால் இதை நான் பொறாமைக்கும் சொல்லிடுவேன்” என்றது .
“ நல்லது! அந்த கட்டளை யாதெனில், உங்களில் ஒருவர் தோல்வியைத் தழுவி ஏதாவது இக்கட்டில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், இன்னொருவர் உதவி புரிந்து அந்த இக்கட்டை சீர்செய்யலாம் ..