இதுவே உங்களில் ஜெயிப்பவர் யார் என்று நிர்ணயிக்கும்” என்ற தலைவருக்கு நன்றியுரைத்த அன்பு , பொறாமையைப் போலவே தனது சக்தியை இரண்டாக பிரித்து யாமினி- யாழமுதனின் உள்ளத்தில் குடியேறியது. ஸ்தம்பித்து நின்ற அரங்கத்தைப் பார்த்த உணர்வுகளின் தலைவன் நெடுஞ்செழியனை பார்த்து சிரித்தது.
“இனி இந்த விளையாட்டை இவனே துவக்கி வைப்பான்” என்று கூறி உணர்வுகளில் தலைவன் மறையவும், மீண்டும் பூமி இயங்கத் தொடங்கியது. சில நொடிகள் ஸ்தம்பித்துவிட்ட தடையமும் இல்லாமல், தடுமாற்றமும் இல்லாமல், அனைவரும் அவரவர் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தனர்.
“வந்துட்டான் .. இவன் என்ன என்னுடைய மினிக்குட்டிக்கு (யாமினி) வாலா? கல்யாண மேடையில கூட இவன்தான் கையப் பிடிச்சு கூட்டிட்டு வருவானா?” என்று சற்றுமுன்பு மனதிற்குள் கருவிய யாழமுதன் ஒரே நொடியில் மாறி போயிருந்தான். அவன் மனதில் குடியேறிய அன்பானது அவனது பார்வையை மாற்றியிருந்தது.
நேற்றிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த செழியன் இப்போது மேடையில் இருந்து இறங்கிக் கொள்ளவும், யாழமுதனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அவனே உணரும்முன் அவனது வலது கை சமிக்ஞையாய் செழியனை மேடைக்கு அழைத்திருந்தது. நெடுஞ்செழியன் பார்வையாலேயே மறுக்கவும், யாமினியிடம் கூறினான் யாழமுதன்.
“ மினி.. உன் அத்தைபையன் பாரு, யாரோ மாதிரி கீழே நிற்கிறான்.. கொஞ்சம் அவனை மேல வர சொல்லும்மா” என்றிருந்தான் அவன் . “சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே” என்று பார்வையாலேயே வயலின் வாசித்தாள் யாமினி.
திருமணத்திற்கு முன் இரவு வரை நெடுஞ்சியழனைத் திட்டிக் கொண்டிருந்தவனா இவன்? தலையில ஏதோ அடி பட்டுருக்குமோ என்று யாமினிக்கே சந்தேகம் வந்திட, அவளது பார்வையை சந்தித்தவன்,
“என்னமா?” என்று வினவினான்.
“ இல்ல.. உங்களுக்கு என்மேல .. சந்தேகம் இல்லையா?”. அதை கேட்கும்போதே யாமினியின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் ததும்பின. அவளது ஒற்றைக் கேள்வியில் மனம் கலங்கி போனான் யாழமுதன் .
“ ச்ச… என்ன வார்த்தை சொல்லிட்டாள் என் மினி? அவ மனசு இப்படி துடிக்கிற அளவுக்கு நடந்திருக்கேனே! பாவம் என்னவள்” என்று எண்ணியவன்,
“உன்மேல எனக்கு எப்பவும் சந்தேகம் வராது மினி .. உன்னை இப்படி ஃபீல் பண்ண வெச்சதுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன்மா” என்று கூறினான். “ஆகாசத்த நான் பாக்குறேன்.. ஆறு கடல் நான் பாக்குறேன்” என்று பின்னணி இசைக் கேட்பதாய் உணர்ந்தாள் யாமினி. அப்போதைக்கு யாழமுதனின் கரத்தைப் பிடித்துக் கொள்வதை தவிர வேறென்ன செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவது என்று அவளுக்கு புரியவில்லை. சுற்றி பலர் இருந்தும்கூட அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் தனது கரத்தை பிடித்துக் கொண்ட தன்னவளை காதலுடன் பார்த்தான் யாழமுதன். ஆனந்தத்தில் விழிநீர் நிறைய அங்கு நின்றிருந்தான் நெடுஞ்செழியன். அவனுக்கும், தெரியும்தான் யாழமுதனுக்கு தான் யாமினியுடன் அதீத அன்பினைப் பொழிவது பிடித்தம் இல்லை என்று!
ஏனோ செழியனுக்கு அது தவறென்று தோணவில்லை ! அவனும் யாழமுதனின் இடத்தில் இருந்திருந்தால் இப்படித்தான் இருப்பானோ? மேலும், யாழமுதனின் பொறாமை அவன் யாமினியின் மீது கொண்டுள்ள நேசத்தைத் தானே பிரதிபலிக்கின்றது ? என்பது அவனது பார்வை! எனவே யாமினியை யாழமுதனின் கரங்களில் பிடித்து கொடுத்தப்பின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கொள்ளலாம் என்று முடிவெடுத்தான் அவன். மேடையிலிருந்தப்படியே, இருவரையும் பார்த்தவன், “ சூப்பர் ஜோடி” என்று விரல்களால் சமிக்ஞை காட்டினான் .
அம்மூவருக்குள் நடந்தேறிய மௌன உரையாடலை ராகவனும் ஸ்வாரகாவும் கண்டுகொண்டனர்.
“ ஹேய் ஜிலேபி , கதையிலே ஏதோ ட்விஸ்ட்டு போல!” என்று ராகவன் கூறிட, “ சரி சரி கண்ணு வைக்காதே!” என்றாள் ஸ்வாரகா. அவள் விளையாட்டாக சொன்னதை உணர்ந்தாலும், குறும்புடன்,
“ யாரை கண்ணு வைக்க சொல்லுற? யாமினியையா? அது தப்பு இல்லையா?” என்று கண்ணடித்தான் ராகவன். சாதாரண நிலையில் இருந்திருந்தால், “ உனக்கு நானே ஜாஸ்தி.. இதுல என் ப்ரண்ட் வேறயா? போப்பா போயி புள்ள குட்டிய படிக்க வை !” என்று கூறியிருந்திருப்பாள் ஸ்வாரகா. ஆனால் இப்போதோ அவள் பொறாமையின் ஆக்ரமிப்பில் அல்லவா இருக்கிறாள்? எனவே, இவன் மண்டையிலேயே ரெண்டு போட்டால் என்ன என்பது போல முறைத்தாள் ஸ்வாரகா.
அவளது விழிகளில் எரியும் தீயில் பெட்ரோல் தெளிப்பதற்கென்றே அங்கு வந்தாள் ராகவனின் அத்தை மகள் ரட்சனா. ரட்சனாத்தான் ராகவனுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட பெண். அதன்பின், இரு குடும்பத்தாருக்குள் நடந்த வாக்கு வாதத்தினால் அந்த திருமணப்பேச்சு நிறுத்தப்பட்டது. இது ஸ்வாரகாவும் அறிந்த விஷயம்தான். எனினும், இப்போதும் ரட்சனாவிற்கு ராகவன் மீது மையல் இருப்பது,கணவன் மனைவி இருவருமே அறிந்திராத விஷயம்.