“அம்மா.. நான் இன்னைக்கு இல்லாட்டாலும் இந்த விஷயம் பெரிசாகும் போது நிச்சயம் மலரத்தான் கல்யாணம் கட்டிகிடுவேன்னு சொல்லிருப்பேன்.. ஆனா இன்னைக்கே பிடிச்சு அப்பா கிட்டே சண்டை போடுவதிலோ, இல்லை வீட்டுலே இருக்கிற கொஞ்ச நேரத்தையும் ஒருத்தொருத்தர் முகத்தை தூக்கி வசிக்கிறதோ வேண்டாம்னு தான் பேசாம இருக்கேன்.. “
“உங்க அப்பாவும் அத மனசிலே வச்சிதான் உன்கிட்ட பேசறதுக்கு என்னை தூது கேட்டுருக்கார்..”
“அம்மா .. என் குல தெய்வமே.. குடும்ப குத்து விளக்கே.. நீதான் என் மேலே மனசிறங்கி மலர கல்யாணம் பண்ணிக்க எங்கப்பாவ சம்மதிக்க வைக்கணும்.. என் வாழ்க்கை ஒளிய ஏத்தும் துணையா மலர் வரதுக்கு நீதான் அருள் புரியணும்.. ஆதி பராசக்தி தாயே..”
“எலேய் .. என்னலே.. வசனம் எல்லாம் தூள் கிளப்பற.. நேத்திக்கு கோவிலிலே நாடகம் பார்த்த எபக்ட்டு ?”
“அம்மா.. நீ இன்னிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்ச இந்த விஷயத்த, முடிச்சு கொடும்மா “
“சரி.. சரி ரொம்ப கெஞ்சாத.. நான் ஏற்கனவே உங்கப்பாகிட்டே பேசிட்டேன்..”
“அம்மா கலக்கிட்டே போ.. அப்பா என்ன சொன்னார்,? காயா பழமா?”
“இப்போதைக்கு காயா தான் இருக்கு... அது பழமா மாறுறது நம்ம வடிவேலு கையில் தான் இருக்கு”
“என்னமா.. சொல்ற..? வடிவேலுன்னா, நம்ம சாமி முருகன சொல்றியா?”
“இல்லலே.. உங்க வடிவேல் மாமா.. நம்ம பக்கத்து ஊருலே இருக்காரே”
“ஒஹ்.. இந்த வாட்டி ஊருக்கு போயிருக்கரப்போ வீட்டுக்கு வந்து இருந்தாரே?”
“ஆமாம் ... அவரேதான்”
“அவர் எதுக்கு இந்த விஷயத்திலே உள்ளே நுழையறார்?”
செழியனின் அம்மா , நமசிவாயம் வீட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்ற கணவனின் எண்ணத்தை சொல்லி, அந்த நமசிவாயம் பற்றின விவரங்கள் சொல்லுபவர் வடிவேல் என்று சொல்லி முடித்தார்.
“அம்மா .. இது எல்லாம் நியாயமா.. ? எப்போவோ வாக்கு கொடுத்ததை வைத்து, இப்போ என் விருப்பத்தை மறுக்கலாமா? அப்பா வாக்கு கொடுத்ததுக்கு நான் எதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும்?”
“அப்படி சொல்லாத தம்பி.. அப்பா அம்மா சேர்த்து வச்ச சொத்து, பாவம், புண்ணியம் எல்லாம் பிள்ளைங்களுக்கு போகும்போது அவர் கொடுத்த வாக்க நிறைவேத்துறதும் பிள்ளைங்க கடமை தான்பா..”
“சரிம்மா... ஆனா இது எல்லாம் அவங்கள பார்த்தோ, பழகின பிறகோ என் மனசிலே வேற ஒரு பெண்ணை வச்சிருந்தேன்னா, தப்புதான். ஆனால் யாருன்னே தெரியாத ஒருத்தருக்காக எப்படி என் விருப்பத்தை விட்டுக் கொடுக்க முடியும்? அதோட அப்பாவுக்கே அவங்கள பத்தின விவரம் எதுவும் தெரியலன்னா, நான் எப்படி சம்மதிக்க முடியும்”
“நானும் அத உங்க அப்பா கிட்டே சொல்லிட்டேன். அதோட எத்தனை நாள் நாம காத்து இருக்க முடியும்னு கேட்டு, அதுக்கு ஒரு பதில் வாங்கிட்டேன்”
“அப்பா என்னம்மா சொன்னார்?”
அவர்கள் இருவரும் பேசியதை அப்படியே கூற,
“அம்மா.. இப்போவும் அவங்கள கண்டுபிடிக்கிறதிலே தானே உறுதியா இருக்கார்.? இதில் எனக்கு எப்படி சாதகமா முடியும்?”
“அதுக்குதான் அந்த வடிவேலன் மனசு வைக்கனும்னு சொன்னேன்”
“அவர் என்ன செய்யணும்நு சொல்றீங்க..?”
“அந்த ஐயா குடும்பத்தை பத்தி வடிவேலு அண்ணன் எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டா, அப்பா இந்த விஷயத்தை விட்டுடுவாங்கதானே..?”
“அது எப்படி முடியும்? இது ரொம்ப நாள் தாக்கு பிடிக்காதும்மா?”
‘அப்படின்னா உங்க அப்பா வடிவேலு அண்ணன பார்த்து பேசுறதுக்கு முன்னாடி , நீ அவர பார்த்து பேசி உன் மனசுலே உள்ளத சொல்லிரு.. அவர் அதுக்கு தகுந்த மாதிரி அப்பாகிட்டே பேச சொல்லி கேட்டுப்பாரு?”
“ஹ்ம்ம்.. நல்ல ஐடியா தான்.. அத விட நாம வடிவேலு மாமாவ பார்த்து அந்த ஐயாவோட விவரம் வாங்கி, அவங்ககிட்டே நேரடியா பேசினா என்ன?”
“இதுவும் நல்ல ஐடியா தான்.. நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ளே நடக்க போற விஷயங்கள மத்தவங்களுக்கு ஏன் தெரியபடுத்தனும்.. அந்த அண்ணன் நல்லவர்தான். இருந்தாலும் பின்னாடி எந்த பிரச்சினையும் அந்த பொண்ணுக்கோ, நம்ம குடும்பத்துக்கோ வரக்கூடதுன்னா, நமக்குள்ளே பேசிக்கிறது தான் நல்லது..”
“தேங்க்ஸ்மா. இந்த விஷயத்திலே உங்க சப்போர்ட் எனக்கு கிடைச்சதே.. ரொம்ப நல்ல அறிகுறியா இருக்கு.. இத இப்படியே நூல் பிடிச்சு போயி, என் விஷயத்தை சாதிக்க பார்கிறேன்..” என்றவனின் கூற்றை அவன் தாயும் அவனை ஆமோதித்தார்.
“அம்மா எல்லாம் சரி.. ஆனால் இந்த வாக்கு விஷயம் ஏன் ? அத பத்தி எதுவும் சொல்லையே நீங்க?”
“எனக்கும் அத பத்தின முழு விவரம் தெரியாதுப்பா .. அத உங்கப்பா கிட்டே தான் கேக்கணும்,”
“சரி.. சரி. .வடிவேலு மாமவ பிடிக்கும் முன்னாடி .. இதையும் தெரிஞ்சிக்கிறேன்” என்றவன், உல்லாசமாக சீட்டி அடித்தபடி தன் அறைக்கு சென்றான்.
தொடரும்!
{kunena_discuss:1126}