(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 06 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

லைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.

ரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.

"எதனால இப்படி இருக்கிறா? வீட்ல சொந்த காரங்க இருக்குறதுனால இப்படி இருக்காளா? ஆனா அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, தேனு, ரகு தான இருக்காங்க? எல்லாரும் அவ வீட்டு சொந்தம் தான? பின்ன எதுக்கு அப்படி இருக்கா?", என்று யோசித்து விடை தெரியாமல் குழம்பினான் சூர்யா.

அவன் அவளை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போதே அறைக்குள் வந்தாள் கலைமதி.

எளிமையான காட்டன் சுடிதாரை தான் அணிந்திருந்தாள். ஞாயிறு அன்று ரிசப்ஷன் இருப்பதால் வியாழன் வெள்ளி லீவு போட்டிருந்தாள். அவனுமே லீவு தான் எடுத்திருந்தான்.

ரெண்டு நாள் அவன் சொன்ன பிறகு நைட்டி போட்டிருந்தவள் இப்போது சுடிதாரை அணிந்திருந்தாள். எதுக்கு என்று யோசிக்கும் போது தான் அவள் சொன்ன சித்தி திட்டுவாங்க என்ற வார்த்தை நினைவு வந்தது.

"அவங்க வந்ததுனால தான் சுடிதாரை போட்டுட்டா போல?", என்று நினைத்து கொண்டு அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.

அவள் முகத்தில் இருந்த சந்தோசம் குறைந்ததுக்கு காரணம் தெரியாமல், அவன் தவிக்கும் போது தான் அவன் மனதையே உணர்ந்தான் சூர்யா.

"அவளோட சந்தோஷத்துக்காக நான் தவிக்கிறேனா? இதுக்கு என்ன அர்த்தம்? அவ சந்தோசம் பெருசுன்னு நினைக்கிறதுக்கு காரணம் அவ என்னோட மனைவி என்பதாலா? இல்லை அதுக்கும் மேலயா?"

கழுத்தில் அவன் அணிவித்த மஞ்சள் கயிறு பள பளவென்று மின்னியது. கூடவே வெறுங்கழுத்தா இருக்க கூடாது என்று சொல்லி  மங்களம் அணிவித்திருந்த ஒரு செயினை அணிந்திருந்தாள்.

இரண்டு கையிலும் கவரிங் வளையல் தான் போட்டிருந்தாள். அப்போது தான் அவனுக்கு யோசனையே வந்தது. "இவளோட அம்மாவோட நகை எல்லாம் இருக்குமே. அதை கூட அத்தை இவளுக்கு கொடுக்க விடலையா? இந்த மாமா எதுக்கு இப்படி கோழையா இருக்காரு. ரெண்டாவது கல்யாணம் பண்றவங்க எல்லாரோட நிலைமையும் இப்படி தான் போல? அவளோட அம்மா நகையையாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம். கல்யாணம் அன்னைக்கு என்ன போட்டிருந்தா?", என்று யோசித்தான்.

"கல்யாணம் அன்னைக்கு அவ முகத்தை கூட நீ பாக்கலை. அப்ப அவ போட்டிருந்த நகையையா பாத்துருப்ப?", என்று கிண்டல் அடித்தது மனசாட்சி.

அதை அடக்கி விட்டு "அம்மா போட்டு விட்டுருப்பாங்க. ஆனா அப்பறமா கழட்டி கொடுத்துருப்பா. அம்மா செயினை மட்டும் போட்டுக்க சொல்லி வற்புறுத்திருப்பாங்க. அவளுக்கு இனிமே நான் தான் வாங்கி கொடுக்கணும். அவங்க அம்மா நகை இல்லாம போனா என்ன? அவளோட புருஷன் நான் இருக்கும் போது, அதுவும் கை நிறைய சம்பளம் வாங்கும் போது இப்படி கவரிங் வளையல் போடலாமா? அம்மா கிட்ட இதை பத்தி பேசணும்", என்று நினைத்து கொண்டான்.

அதற்கு முன்னால் அவள் சோர்ந்திருந்த முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்து "கலை இங்க வாயேன்", என்று அழைத்தான் சூர்யா.

"சொல்லுங்க அத்தான். எதாவது வேணுமா?", என்ற படி அவன் எதிரே நின்றாள்.

"அதெல்லாம் வேண்டாம். இங்க உக்காரு. நான் கொஞ்சம் பேசணும்", என்ற படி அவன் எதிரே இருந்த சேரை எடுக்க கை நீட்டினான்.

"நானே எடுக்குறேன்", என்று சொல்லி அவன் முன்னே இழுத்து போட்டு அமர்ந்தாள்.

"சொல்லுங்க அத்தான்", என்று சொல்லி குழப்பமான மனதுடன் அவன் முகத்தை பார்த்தாள்.

"உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு, என்னை பிடிச்சிருக்கு, இந்த வீடு பிடிச்சிருக்கு, என்னோட அம்மா அப்பாவை பிடிச்சிருக்குன்னு தெரியும்"

புருவம் உயர்த்தியவள் "ம்ம்ம் ஆமா. அதனால என்ன? எல்லாமே பிடிச்சிருக்கே", என்றாள்.

"என் குழப்பமே அது தான் கலை. இங்க வந்ததுல இருந்து நீ தயக்கமா இருந்தாலும் சந்தோசமா தான் இருந்த. ஆனா நேத்தும் இன்னைக்கும் உன் முகம் சரியாவே இல்லை. ஏதோ தவிப்பாவே இருக்குற மாதிரி இருக்கு.

இந்த ரிசப்ஷன் உனக்கு பிடிக்கலையா?"

"அப்படி எல்லாம் இல்லை அத்தான். உங்க பக்கத்துல நிக்க கூட எனக்கு தகுதி இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அது பிடிக்காம  போகுமா? இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லை தெரியுமா?"

"அப்புறம் ஏன் கலை ஒரு மாதிரி இருக்க? ரெண்டு நாளா உன் முகம் சரியே இல்லை. எதையோ யோசிச்சு நீ கவலை படுற. என்ன மா? யாராவது எதாவது சொன்னாங்களா?"

....

"அப்ப யாரோ உன்னை ஏதோ சொல்லி கஷ்ட படுத்திருக்காங்க அப்படி தான? அதுக்கு தான அமைதியா இருக்க"

....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.