இருவரிடமும் பேசிவிட்டு மகி அறைக்குள் வரும்போதே சுடர் குளித்துவிட்டு அறைக்குள் வந்திருந்தாள். அதுவும் சல்வார் அணிந்திருந்தாள். இதுவரை அவளை சல்வாரில் அவன் பார்த்ததில்லை. வெளியே வந்தாலே ஒரு டாப், பேண்ட் தான் அவளது உடை. வீட்டிலோ பகலில் முட்டிக்கு கொஞ்சம் கீழே வரை ஒரு பாவாடை, மேலே ஒரு டாப் இப்படித்தான் அவளை பார்த்திருக்கிறான். இன்றோ சல்வாரில் முற்றிலும் வேறு மாதிரி தெரிந்தாள். தன்னையே அவன் பார்ப்பதை உணர்ந்தவளோ திரும்பி அவனைப் பார்த்து “என்ன பார்க்கிற?” என்றுக் கேட்டாள்.
“சல்வார் போட்ருக்கியே அதான் பார்த்தேன்..”
“ஏன் பொண்ணுங்க சல்வார் போட்டு பார்த்ததே இல்லையா?”
“நீ போட்டு தான் பார்த்ததில்ல..”
“நானும் போட்ருக்கேன்..” என்று அவனிடம் கூறினாள். ஆனால் உண்மையில் அவள் இதுவரையில் சல்வார் அணிந்ததில்லை. சிறு வயதில் இருந்தே அதுபோன்று ஆடைகளுக்கு தான் பழகியிருந்தாள். இங்கே வந்ததற்கு பிறகு எழில் சில சல்வார் செட்டுகள் எடுத்து கொடுத்த போதும் இதுவரை அணியாமல் இருந்தவளுக்கு, இன்று அதை அணிந்து பார்க்க தோன்றியது.
திருமணம் ஆகிவிட்டது என்ற உணர்வு, அதிலும் அறிவழகனின் அறையில் தங்கியிருக்கிறோம் என்பதாலும், சல்வாரை அணிந்துக் கொண்டாள். அதிலும் முக்கியமாக நேற்று கண்ணாடியில் பாத்க்கும்போது கழுத்தில் இருந்த் மஞ்சள் கயிறோடு அந்த உடை பொருந்தாத ஒரு தோற்றம், அதற்காகவே இந்த உடையை அணிந்துக் கொண்டாள். ஆனாலும் மகியிடம் அதைப்பற்றி கூறவில்லை. அவனுமே அதற்கு மேல் எதுவும் கேட்கவுமில்லை.
“சுடர்.. இந்த ரூம்ல நாம ரொம்ப நாள் இருக்க முடியாதில்லையா? அதனால நாம ஒரு வீடு பார்த்து குடியேறனும்..” என்றவன், நேற்று அறிவழகனோடு பேசிய விஷயத்தை கூறினான். அதற்கு அவளோ,
“நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க, அதான் கழுத்துல ஒரு கயிறு கட்டிட்டோமே அப்படியே குடித்தனம் நடத்தலாம்னு முடிவுப் பண்ணிட்டியா.. உன்னோட குடும்பத்துல இருக்கவங்க விருப்பத்தோட என்னை கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியா இல்லையா?” என்று கத்தினாள்.
“கத்தாத சுடர்.. அப்பா சொன்னதை நீயும் தான கேட்ட, கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும்.. அதுவரைக்கும் நாம எங்க இருக்கறது..?”
“எனக்காக உன்னோட குடும்பத்தை விட்டு வர வேண்டாம் மகிழ்.. அதுக்கும் எல்லோரும் என்மேல தான் கோபப்படுவாங்க.. நீ உன்னோட வீட்லயே நீ இரு.. நான் ஏதாச்சும் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கிறேன்..”
ஒருவேளை இந்த விஷயத்தை நேற்று சொல்லியிருந்தால் அவன் கொஞ்சமாவது யோசித்து பார்த்திருப்பான்.. ஆனால் நேற்றே யார் சொல்லியும் அவளை விட்டுவிட தயாராக இல்லாத அவன், இரவு அந்த விஷப்பாட்டில் விஷயம் தெரிந்தப்பின் அவளை விட்டுவிடுவானா?
“நீ எங்கேயும் இருக்கப் போறதில்ல.. நாம ஒன்னா தான் இருக்கப் போகிறோம் என்று தெள்ள தெளிவாக கூறியவன், கீழ் வீட்டை பார்க்குமாறு அவளை அழைத்துச் சென்றான்.
அறிவு சொன்னது போல் வீடு சிறியதாக இருந்தாலும் பின்பக்கம் எந்த தொல்லையும் இல்லாமல் தனியாக இருந்ததால் இருவருக்கும் அந்த வீடே பிடித்தது. அதனால் அதிலேயே குடி போக முடிவெடுத்தனர். அதனால் மறுநாளே பால் காய்ச்ச நினைத்தவர்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றனர்.
கடைக்கு செல்வதற்கு முன்னரே இருவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் கடைக்குள் நுழைந்தனர்.
மகி தான் தன் அன்னையிடம் கேட்டு என்னென்ன முக்கிய தேவையோ அதையெல்லாம் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தான். சுடரோ வெறுமனே கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். லண்டனில் இருந்த போதும் சரி, இங்கே சென்னையிலும் சரி தேவை என்றால் தவிர, தன் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தவளுக்கு வீட்டுக்கு தேவையானது என்னென்ன வாங்க வேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை. அதனால் அதிலெல்லாம் கவனம் வைக்காமல் சுற்றிப் பார்த்தப்படியே மகியை விட்டு கொஞ்சம் தள்ளி வந்திருந்தாள். அப்போது சுடர் என்று யாரோ அவளை அழைத்தார்கள்.
குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்து ஒருவன் கை ஆட்டினான். ஆண்களுக்கே உரிய உயரம், மாநிறம், கையில்லாத ஒரு டீஷர்ட், த்ரீ போர்த் பேண்ட், முதுகில் ஒரு பேக் பேக், கண்களில் ஸ்டைலிஷாக ஒரு கண்ணாடி, முற்றிலும் முடியை படிய வாரிவிட்டு, முன் முடியை மட்டிம் சிறிய கோபுரம் போல் தூக்கி விட்டிருந்தான்( அதாங்க ஸ்பைக்ஸ்).
கையாட்டியவனை பார்த்து சுடர் முகம் சந்தோஷத்தை காட்டியது. “சார்லி..” என்று சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டாள். அவளின் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவனும் அவள் அருகில் வந்தான். அதற்குள் சில விஷயங்கள் அவளுக்கு ஞாபகம் வந்து அவள் முகம் மாறியது.
மகியும் யாரோ சுடரை அழைத்தார்களே என்று திரும்பி பார்த்தவன், அவனை கண்டு.. “இவனா.. இவன் எப்போ லண்டன்ல இருந்து வந்தான்..” என்று நினைத்தவன், அவனை பார்த்து முறைத்தப்படியே தானும் சுடர் அருகே செல்ல நினைத்தான்.
சந்தோஷத்தைக் காட்டிய தோழியின் முகம் திடிரென இறுக்கமாக மாறியதை பார்த்தாலும், அதை பொருட்படுத்தாமல், “ஹாய் டார்லிங்..” என்றப்படியே அருகில் சென்று லேசாக அவளை அணைத்தான் சார்லஸ்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}