இந்த நிமிடம் வரை இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளின் ஒரு துளியை கூட உணர்ந்திருக்கவில்லை அத்தை. அங்கே அருகில் இருந்த அவனது அப்பாவின் முகத்தில் பெரிய மாற்றம். ஆயினும் எதுவுமே சொல்லவில்லை அவர்.. மணமக்களின் முகத்தையே பார்த்திருந்தார்..
கொஞ்சம் திகைத்து போய் திரும்பினான் ஹரிஷ்
‘ஏன் அத்தை நானே மூணு முடிச்சு போட மாட்டேனா என் பொண்டாட்டிக்கு. இதுக்கு எதுக்கு அசிஸ்டென்ட்?’
‘டேய்... நீ சும்மா இரு. உன் தங்கச்சிதான் முடிச்சு போடணும். அதுதான் சம்பிரதாயம். அதை எல்லாம் மாத்த கூடாது. உன் தங்கச்சி ஸ்தானத்திலே இருக்கிறவளாலேதான் நல்ல மனசோட உனக்கு தாலி முடிய முடியும். அப்போதான் உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்’
‘ஏன் அத்தை நான் கூட நல்ல மனசோடத்தான் கட்டுவேன்’ அவன் விடாமல் பேச
‘டேய்... நீ இப்போ வாயை மூடலைன்னா நான் கல்யாணத்தை நிறுத்திடுவேன்’ அத்தை விளையாட்டாக மிரட்ட இப்போதும் வாய் திறக்கவில்லை அப்பா. மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்.
‘நான் இப்போ என்ன செய்ய?’ மிகப்பெரிய தர்மசங்கடத்தில் அனுராதாவின் காதில் கிசுகிசுத்தாள் கீதா. ஹரிஷின் முகத்தை பார்ப்பதை தவிர வேறெந்த வழியும் தெரியவில்லை அவளுக்கு.
சில நொடி யோசனை அவனுக்குள்ளே. அப்பாவை பார்த்தான் அவன். அவர் முகத்தில் எந்த பாவமும் இல்லை. பின்னர் அனுராதாவை பார்த்து சொன்னான் அந்த வார்த்தைகளை.
‘அதான் சொன்னாங்களே உன் தங்கச்சி ஸ்தானத்திலே இருக்கிறவளாலேதான் நல்ல மனசோட உனக்கு தாலி முடிய முடியும்னு. இவளும் ஒரு காலத்திலே எனக்கு ஃப்ரெண்டா இருந்தவதானே. இவளும் நல்ல மனசோட தாலி முடிவான்னு நம்புவோம். விடு. அவளே செய்யட்டும்’
மகிழ்ந்து குளிர்ந்து போனாள் கீதா. ‘உன்னை மன்னித்தேன் போடி’ என்பதை அவன் இப்படி சொன்னதாகத்தான் தோன்றியது அவளுக்கு. அவள் கண்களில் நீர் கட்டிக்கொண்டன
‘நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் சரி உன் கல்யாணத்திலே நான்தான் உன் பொண்டாட்டிக்கு தாலி முடிவேன். சொல்லிட்டேன். ஞாபகம் வெச்சுக்கோ’ அவள் முன்பு அவனிடம் சொன்னது அவளது நினைவில் ஆடிக்கொண்டே இருக்க
தாலி அவன் கைக்கு வர சந்தோஷ பூரிப்புடன் அனுராதாவின் முகம் பார்த்துக்கொண்டே இவன் தாலிக்கு ஒரு முடிச்சு போட சந்தோஷ நெகிழ்ச்சியுடன் மற்ற இரண்டு முடிச்சுகளை போட்டு விட்டிருந்தாள் கீதா.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்
{kunena_discuss:1147}