நடுவில் உள்ள புகைப்படத்தில் துஷ்யந்தும் கங்காவும் மணமாலையோடு ஜோடியாக நின்றிருக்க, சுற்றியுள்ள புகைப்படங்களில், துஷ்யந்தும் கங்காவும் மாலை மாற்றுவது, தாலி கட்டுவது, நெற்றியில் குங்குமம் இடுவது, காலில் மெட்டி அணிவிப்பது, கங்காவின் கையை பிடித்தப்படி துஷ்யந்த் அக்னியை வலம் வருவது, இருவரும் அம்மன் சன்னிதானத்தில் நின்று கண்களை மூடி சாமி கும்பிடுவது என்று அத்தனையும் சேர்த்து ஒரு பெரிய புகைப்படமாக அழகுப்படுத்தி அந்த அறையில் மாட்டி வைக்கப்படிருந்தது.
இது வாணி கொடுத்திருந்த புகைப்படத்தையும் அதன் நகலையும் வைத்து துஷ்யந்த் தயார் செய்தது. இப்படி ஒரு புகைப்படம் அவர்களது திருமணத்திற்கு ஆதாரமாக இருந்ததை பற்றி இன்னும் யாரும் கங்காவிடம் சொல்லியிருக்கவில்லை. துஷ்யந்த் தான் யாரிடமும் சொல்லக் கூடாதென்று சொல்லி வைத்திருந்தான். அதனால் தான் இப்போது அந்த புகைப்படத்தை பார்த்தவள், அதிசயித்து நின்றிருந்தாள்.
தங்களது திருமணத்தில் புகைப்படம் எடுக்கவில்லையே? பிறகு இது எப்படி என்று கங்கா வியந்தாள். ஒருவேளை அது செயற்கையாக உருவாக்கப்பட்டதோ? என்ற கேள்வி பிறந்தாலும், அதில் 25 வயது துஷ்யந்தும், 20 வயது கங்காவும் அப்படியே நின்றிருந்தனர். அதுவும் அன்று அணிந்திருந்த புடவை, அவனது உடை எல்லாமே அப்படியே இருந்தது. எப்படி இது சாத்தியம் புரியாமல் அவனை பார்த்தாள். அவனும் முழு விவரத்தை கூறினான்.
அவளது திருமணம் நடந்த போது அவளுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் அதன்பின் எத்தனையோ முறை மற்றவர்களை போல் தன் திருமணமும், திருமண வாழ்க்கையும் இல்லை. அந்த திருமணத்திற்கு மட்டும் ஆதாரம் இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்றெல்லாம் வருத்தப்பட்டிருக்கிறாள். இப்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அருகில் இருந்தவனின் கையோடு கை கோர்த்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இப்போது அவளுக்கு இருந்த பதட்டமும் இறுக்கமும் குறைந்திருந்தது.
“இதே போல ஒரு போட்டோ நம்ம வீட்டு ஹாலிலும் மாட்டனும்பா..”
“ம்ம் நாளைக்கே மாட்டிடுவோம்.. இன்னைக்கே கூட மாட்டிருப்பேன்.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு தான் இப்போ மாட்டல.. ஆமாம் இந்த நடுவுல இருக்க போட்டோ எப்படி? ரெண்டுப்பேரும் போட்டோ எடுக்க தெரிஞ்சது போலயே போஸ் கொடுக்கிறோம்..” அவன் கேட்டதற்கு,
“அது சாமி கும்பிட்றதுக்கு முன்ன கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்தோமே அப்போ எடுத்ததுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அது ரொம்ப அழகா வந்திருக்குல்ல..” என்று அவன் தோளில் சாய்ந்தப்படியே பதில் கூறினாள்.
அதன்பின் இருவரும் நடுநிசி ஆகும் வரையுமே பேசிக் கொண்டிருந்தனர். இது பேசும் நேரமா? ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளவோ, அறிந்துக் கொள்ளவோ இருவரும் புதுமண தம்பதிகள் அல்ல, திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே ஒருவரையொருவர் நன்கு அறிந்துக் கொண்டனர். இந்த ஆறு வருடத்தில் விலகியிருந்தாலும் இருவருமே நன்றாகவே ஒருவரையொருவர் புரிந்து வைத்தும் இருந்தனர். அதனால் தான் இப்போது அவளின் மனநிலையை அறிந்து அவன் அமைதியாக இருந்தான் என்றால், அறைக்குள் வந்த போதே அவனது மனநிலையை அவளும் அறிந்து கொண்டதால் தான், தனக்காக யோசித்து அமைதி காக்கும் அவனது நிலையை புரிந்துக் கொண்டாள்.
“இப்படி தான் ரெண்டுப்பேரும் பேசிட்டே உட்கார்ந்திருக்க போறோமா?”
“உனக்கு தூக்கம் வருதா கங்கா.. அப்போ படுத்துக்கோ..”
“இங்கப்பாருங்க இந்த ரூம்க்குள்ள வரும்போது இருந்த மனநிலை இப்போ எனக்கில்ல.. நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”
“தெரியும்.. அதுக்காக இப்பவே நமக்குள்ள எல்லாம் நடக்கணும்னு இல்ல.. நமக்கு இன்னும் வாழற காலம் நிறைய இருக்கு தெரியுமா?”
“அதைத்தான் நானும் சொல்றேன்.. உங்கக்கூட எப்படில்லாம் வாழணும்னு எனக்கும் நிறைய ஆசைகள் கற்பனைகளெல்லாம் இருக்கு.. அப்படி இருக்கப்போ எனக்கு ஏன் முதலில் இப்படி ஒரு பதட்டம் வந்துச்சுன்னு தெரியல..”
“அதுல ஒன்னும் தப்பு கிடையாது கங்கா.. “
“ஆனாலும் உங்களை சங்கடப்படுத்திட்டேன்னு இப்போ உறுத்தலா இருக்கு..”
“எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல.. சொல்லப்போனா உன்னை போல ஒருத்தி எனக்கு கிடைச்சதுல மனம் சந்தோஷத்துல நிறைஞ்சு போயிருக்கு.. இந்த நிறைவே இப்போதைக்கு எனக்கு போதும் கங்கா..”
“ஆனா எனக்கு போதாதே.. எப்பவும் உங்கக்கிட்ட நான் தயக்கம் காட்டினதே இல்ல.. இப்பவும் அப்படித்தான்.. இதுக்கும் மேலே என்னால பொறுமையா இருக்க முடியாது.. நான் உங்க குழந்தைக்கு தாயாகணும், நாம பேரன் பேத்தியிலிருந்து, கொள்ளுப் பேரன் பேத்தியெல்லாம் பார்க்கணும்.. எனக்கு சுமங்கலியா செத்து போகல்லாம் ஆசையில்லை.. ஏன்னா நான் இல்லாம நீங்க தனியா இருக்க மாட்டீங்க்க.. அதனால நீங்க இருக்க வரைக்கும் நானும் இருப்பேன். நீங்க இந்த உலகத்தை விட்டு போன நொடி நானும் இந்த உலகத்தை விட்டு போயிடணும்.. அப்படிப்பட்ட அன்னியோன்ய தம்பதியா வாழணும்..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளை இறுக அணைத்தவன், அவளை அடுத்த வார்த்தை பேச விடாது அவளது இதழையும் சிறைப்பிடித்திருந்தான். அதன்பின் அவன் செய்த செயல்களுக்கெல்லாம் அவள் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்.
ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே