இருக்காது! சுமித்ரா எங்கு செல்வதானாலும் தன்னிடம் சொல்லாமல் சென்றதில்லை. நட்பு வட்டத்தோடு சென்றாலும் இவனுக்கு தகவல் சொல்லாதிருந்ததில்லை. சுந்தர் பார்த்தது அவளாக இருக்க முடியாது.
“நீ வேற யாரையோ பார்த்துட்டு சுமித்ரானு நினைச்சிருக்க. அவள் வீட்ல இருப்பா”
“எனக்கு நல்லா தெரியும் சர். நான் அவங்களைதா பார்த்த” உறுதியாக சொன்னான் சுந்தர்.
அன்று சுமி, மாருத வேகனை பற்றி செய்தித்தாளில் படித்ததையோ இவன் கோபம் கொண்டதையோ மறந்தவனாக, காதலி தன்னிடம் சொல்லிகொள்ளாமல் எதையும் செய்ததில்லை, இங்கும் வந்திருக்கமாட்டாள் என்பதை உறுதியாக நம்பினான். அதை சுந்தரிடம் நிரூபித்திடும் வேகத்தில் கைபேசியை காதுக்கு கொடுத்தபடி, “நீ பார்த்தது அவ இல்லைனு இப்போ தெரியும் பாரு” சொன்னவன் சுமித்ரா அழைப்பை ஏற்க காத்திருந்தான்.
“என்னடி உன் ஆளு ரொம்பவே வேகமா இருக்காரு. குற்றவாளிகளை கூட இப்படிதா பிடிக்குறாரோ? அவருக்கு தெரியாம வந்திருக்கனு சொல்லி வாயை மூடலை உன்னை கூப்பிடுறாரு” வியந்து அனிதா சொல்ல, தோழியின் முகத்தில் தெரிந்த பயத்தையும் குழப்பத்தையும் கவனித்த தீபா உள்ளுக்குள் பயமிருந்தாலும்,
“அப்படியெல்லா இருக்காதுடி! இந்த லூசு ஏதோ உளறுருனா... நீ எடுத்து பேசுடி. அவரு சும்மா கூட உங்கிட்ட பேசனும்னு தோன்றி கூப்பிட்டிருக்கலாம்ல” தீபாவின் வார்த்தைகள் தைரியமளிக்கவும், சுமித்ராவும் அழைப்பை ஏற்க, கடைசி நொடியில் அது நின்றுபோனது.
சுந்தரிடம் தன் நம்பிக்கை பொய்க்கவில்லை என தெரிவித்திடும் வேகத்தில் மறுபடியும் அழைத்தான் சங்கர்.
இம்முறை சுமித்ரா அழைப்பை உடனடியாக ஏற்க, “எங்க இருக்க சுமி? வீட்லதானே?” அவள் வீட்டில்தான் இருப்பாளென்ற உறுதியோடு அவன் கேட்க,
இவள் மெரினாவுக்கு வந்திருப்பது தெரிந்தே கேட்கிறான்! அவனிடம் பொய் சொல்கிறாளா என்று சோதிக்கிறானா? தன்னிடம் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கை இவ்வளவு தானா? காதலில் விழுந்த நாள் முதல், ஒளிவு மறைவின்றி மனதிலிருப்பதை அவனிடம் பகிர்ந்து கொண்டதெல்லாம் அர்த்தமில்லாமல் போனதாக உணர்ந்தாள். மாருத வேகனை தன்னவனுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து இங்கு வந்திருப்பதை சொல்லாமல் மறைத்தாள்! அவன் தன்னை சந்தேக படுகிறான் என்பதை அவமானமாக உணர்ந்தாள்.
அனிதா மற்றும் தீபாவின் கண்கள் தன் முகத்தையே கலவரத்தோடு கவனிப்பது தெரிய, தோழிகளின் முன்னிலையில் எதையும் காட்டிகொள்ள விரும்பாது, “மெரினா பீச் வந்திருக்க” அவன் கேள்விக்கு பதிலாக இல்லாது, கடமைக்காக அவளிருக்கும் இடத்தை சொன்னாள். அதிலிருந்த வழமைக்கு மாறான இறுக்கமும் சுருக்கமும் தோழிகளுக்கு புரியவில்லை என்றாலும் சங்கருக்கு புரிந்தது.
அழைப்பை துண்டித்ததும் சங்கர் அமைதியாய் இருக்க, “என்ன சொன்னாங்க சர்? எங்க இருக்காங்களாம்? இங்கதானே” சுந்தர் கேட்கவும் ஆமென்பதாக தலையை அசைத்துவிட்டு அமைதியையை தொடர்ந்தான்.
ஆனால் மனமோ எதையெதையோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
மின்னலுக்கு போட்டியாக கருவானில் பளிச்சிட்ட உருவமொன்று சில நொடிகள் அசைவின்றி அந்தரத்தில் நின்றிருந்தது. மாருத வேகனின் சாகசங்களை காதில் மட்டுமே கேட்டறிந்தவர்களுக்கு கண் முன் தெரிந்த அதிசயத்தில் வாயடைத்து போனது. அவ்வுருவத்துக்கு பின்னால் வானை வெட்டிய மின்னலில் மீண்டும் ஒளிர்ந்தது அவனுடல். இம்முறை அவன் முகமும் காணக்கிடைத்தது. தங்களை மறந்திருந்த வாய்களில் தானாக மாருத வேகன் என்று மெலிதாக ஆரம்பித்த முணுமுணுப்பு சற்று நேரத்தில் முழக்கமாக பெருகியது.
தன் மீதான மக்களின் அன்பை அறிந்து ஓரளவுக்கு புரிந்தும் வைத்திருந்தான். ஆனால் இன்றோ முதன் முறையாக இத்தனை மனதை கொள்ளை கொண்ட அன்புக்கு சொந்தக்காரன் என்பதில் உற்சாகமும் பெருமிதமும் நெட்டி தள்ள பறக்க துவங்கினான். அவனிடமே பார்வையை பதித்திருந்த மக்களின் தலைகள் அவன் பறந்த திசையெல்லாம் திரும்பின. அவன் உற்சாகத்துக்கும் இம்மியளவும் குறையாத மக்களின் உற்சாகம்! அவர்கள் துள்ளி குதித்து அவன் பெயரை உரக்க கத்தியும் அதை வெளிபடுத்தினர்.
மாருதன் மெரினாவில் தோன்றிய கணத்திலிருந்து ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கிய நிகழ்பதிவிகள், தொலைக்காட்சிகள் வழியாக அவற்றை கக்கிக்கொண்டிருக்க, நாயகனின் அசைவிற்கேற்ப தங்கள் மனதில் உதித்த கற்பனைகளை இடைவிடாது பேசித் தீர்த்தனர் தொகுப்பாளர்கள்.
இதுவரை மாருதனை படங்களில் மட்டுமே பார்த்திருந்த பல கண்கள் ஆர்வமாக அவனை மொய்த்தன. வெள்ளி நிறத்தில் பளபளத்த பாகு போன்ற உடை தலை முதல் பாதம் வரை மறைத்து கச்சிதமாக அவனுடலை கவ்வியிருக்க, முகத்தில் நீல நிறத்தில் தனித்து நின்றன கண்களுக்கான இடம். உள்ளங்கை முதல் முழங்கை வரையிலும், பாதத்திலிருந்து முழங்கால் வரையிலுமாக அதே நீல நிறம் பரவியிருந்தது.
அவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் எடுத்திருந்த விழாவில் அவர்களின் அன்பின் ஆரவாரம், சிரத்தை எடுத்து செய்திருந்த அழகான மேடை அலங்காரங்கள், ஆங்காங்கே எட்டிப்பார்த்த அட்டைகளின் வாசகங்களில் வேகனின் இதயம் இனித்தது. குடும்பத்தின் அன்பையும் பாசத்தையும் தொலைத்து தனியொருவனாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்க.. இன்று கண்ணெதிரே எழுந்திருக்கும் அன்பின் அலையில் திக்கு முக்காடிப் போனான். வேகனுக்கான உணர்ச்சிகர தருணம்! தாமாக கால்கள் ஒலிவாங்கியின் முன் அவனை நடத்தியிருக்க, மக்களிடையே அமைதி.
தனக்குள் மூழ்கியிருந்த சங்கரை கலைத்தது சுந்தரின், “அவன் வந்துட்டா பாருங்க சர்! மணி கணக்கா காட்டு கத்தல் போட்டுட்டிருந்த கூட்டமா இதுங்குற மாதிரி ஆச்சரியமா இருக்கு. இத்தனைக்கும் அவன் இன்னும் பேச ஆரம்பிக்கவே இல்லை” மக்களின் அமைதி தந்த ஆச்சரியத்தை வாய் பேச கண்கள் மேடையில் நிலைத்திருந்தன.
கடலிலிருந்த பார்வையை திருப்பி மேடையை பார்த்தவன், “இவன் உண்மையான மாருத வேகன் தானா?”
வருவான் வேகன்...
Go to Misaraga Sangini story main page
{kunena_discuss:1224}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.