விரல்களால் அலைந்தார்.
கண்ணை மூடினான் சத்யா. அவனுக்கு குழப்பமாக இருந்தது. பவித்ராவை நிம்மதியாக வாழ விடக்கூடாது என எண்ணித்தான் அவன் இந்த கம்பனிக்கு வந்தது. ஆனால் அவளை காணும் வரை அவன் மனதில் இருந்த கோவம் அவளை கண்டதும் அதன் தீவிரத்தை குறைத்து கொண்டதை போல தோன்றியது அவனுக்கு. அதனாலேயே அவன் பட்ட அவமானத்தை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி கொண்டான். அவனுக்கு அவன் மேலே கோபமாக வந்தது. ஆனால் அதே சமயம் அவளை பற்றி அவன் கொண்ட பிம்பத்திற்கும் இன்று ஆஃபிஸில் அவள் நடந்து கொண்ட விதத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தது. அவள் இப்போதும் மற்ற பெண்களிடம் இருந்து தனித்து தெரிந்தாள். அது தானே அவனை அவளிடம் சாய்த்தது. அவளை முதல் முதலாக பார்த்த அந்த நாள்...மறக்கமுடியுமா அவனால்!!!
அவன் வீட்டிற்க்கு ஒரே பையன். அவன் அப்பா சுந்தரம் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பதால் வீட்டிலும் பயங்கர கண்டிப்பு. அவன் அம்மா லட்சுமி அதற்க்கு நேர் எதிர். எப்போதும் சிரித்த முகத்துடன் தான் வளைய வருவார். அதனால் சத்யா எப்போதும் அம்மா செல்லம். லட்சுமிக்கும் சுந்தரத்திற்கும் கிட்டத்தட்ட பதினைந்து வருட வயது வித்தியாசம் இருந்தது. இருவரும் காதல் மணம்புரிந்தவர்கள். அவர்களின் வயது வித்தியாசத்தை வைத்து அவ்வப்போது சத்யா அவர்களை கிண்டல் செய்வது உண்டு.
அப்போது அவன் எம்பிஏ கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான். கல்லூரியில் நடந்த நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் அவனுக்கு வேலையும் கிடைத்திருந்தது. கடைசி வருட ப்ராஜெக்ட் வேலைக்காக வெளியே போவதாக கூறி கொண்டு அவனும் அவன் நண்பர்களும் அங்கு அருகே இருந்த ஒரு காபி ஷாப்பில் தான் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள்.
அன்றும் அப்படி தான் அந்த காபி ஷாப்பின் வெளியே அனைவரும் பைக்கை நிறுத்தி கொண்டு அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.
"டேய்ய் அங்க பாருடா இந்த காலத்துல கூட பொண்ணுங்க இப்படி ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்லாம இருப்பாங்களா என்ன" அவன் நண்பர்களில் ஒருவன் சொல்ல, இன்னொருவன் திரும்பி பார்த்து விட்டு, "அதனால என்னடா, ஆளு செம்மையா இருக்கால்ல" என்று சொல்ல, மற்றவனும் அதை ஆமோதித்தான். யாரை பார்த்து சொல்கிறார்கள் என்று சத்யாவும் அந்த புறமாக திரும்பி பார்க்க அங்கே அருகே இருந்த அந்த பெரிய நூலகத்தின் வாயிலில் நின்றிருந்தாள் அவள்.