தன்னை கட்டுப்படுத்த முயல, இவளோ இத்தனை நாள் இருந்த கோவம் எல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து பேசினாள்.
"உங்களை சொல்லி தப்பில்லை. ஒரு பொண்ணை எப்படி மதிக்கணும்னு உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கு சொல்லி வளர்க்காத உங்க அம்மாவை சொல்லணும் " அவள் சொல்லி முடிக்கவில்லை, அவளின் கன்னத்தில் இறங்கியது இடி போல அவனின் கை. அதை அவள் உணரும் முன்னே சுருண்டு விழுந்தாள் கீழே.
"என் அம்மாவை பத்தி பேசுன, சாவடிச்சிடுவேன்" அவள் கீழே கிடந்ததை பற்றி உணராமல் அவன் பேசினான். தன்னுடைய கோவத்தை அங்கிருந்த டேபிளில் கைகளால் குத்தி தீர்த்தவன், பவித்ராவிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவும் அவளை திரும்பி பார்த்தான். அவள் அருகே சென்றவன் மெல்ல தன கைகளால் அவளை எழுப்பினான். அவள் அப்படியே துவண்டு அவனின் மடியில் விழ பதறி போனான் சத்யா.
"பவித்ரா பவித்ரா" அவன் தன்னுடைய கையை கொண்டு அவளின் கன்னத்தில் தட்டினான். ஹம்ம்கூம், எந்த அசைவும் இல்லை அவளிடம். அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். அப்போதும் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவனுக்கு பதறியது.
"பவித்ரா, ப்ளீஸ் எழுந்திரு, சாரி பவி. ஏதோ கோவத்துல, சே " தலையில் அடித்து கொண்டவன் அவளை அள்ளி எடுத்து கொண்டு கீழே ஓடினான். அவளை காரில் கிடத்தியவன், காரை வேகமாக மருத்துவமனையை நோக்கி விரட்டினான்.
அந்த அறைக்குள் அவளை கொண்டு சென்று அறை மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இங்கே இவனுக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது. வெளியில் இருந்த சேரில் உட்கார்ந்திருந்தவன் தன்னையே கேள்வி கேட்டு கொண்டிருந்தான்.
"உன்னால் எப்படி அவளை அடிக்க முடிந்தது? அவளை அடிக்கும் உரிமை உனக்கு எப்படி கிடைத்தது? ஒரு பெண்ணை அடிப்பவன் எந்த வகையிலும் ஆண்மகனே இல்லை என்று சொல்லித்தானே வளர்த்தார்கள் அம்மா! அப்படி இருந்தும் நீ செய்த காரியம் என்ன?"
"இல்லை அவள் அம்மாவை பற்றி பேசினாள்" ஒரு புறம் அவன் மனம் பதில் சொல்ல,
"நீ செய்த காரியத்தை அம்மாவே மன்னிக்க மாட்டார்." மறுபுறம் அதே மனம் அவனின் கேள்விக்கு பதில் சொன்னது.
"முதலில் எனக்கு ஏன் அவள் மேல் அத்தனை கோபம் வந்தது? அவள் ஒருவனை காதலித்தால் அது அவளின் உரிமை. அதை எப்படி நான் எதிர்த்து கேள்வி கேட்க முடியும்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது அதற்க்கு? " கைகளால் தலையை தாங்கி பிடித்தான்