சத்யா.
"எனக்கு ஏன் கோவம் வந்தது?" இந்த கேள்வி திரும்ப திரும்ப அவன் மனதில் ஓடியது.
"நான் எதற்க்காக இங்கே வந்தேன்? அவளை பழி வாங்க தானே? ஆனால் அவளை பார்த்ததும் அதுவரை அவள் மேல் எனக்கிருந்த கோபம் எல்லாம் கரைய தொடங்கியதே! மீண்டும் மீண்டும் அவளை காண காண என் மனம் அவள் புறம் சாய தொடங்கிவிட்டது. அவளை இன்னொருவருடன் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் தானே கோபம் கொண்டேன்...என்ன காரணம் சொன்னாலும் நான் அவளை அடித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது தவறு... அவள் எழுந்ததும் முதலில் அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளின் வாழ்வில் இருந்து விலகிவிட வேண்டும். அவள் அவளுக்கு பிடித்தவருடன் வாழட்டும்..."என்னென்னமோ நினைத்து மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தவன் அங்கே ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தான்.
அவளுடன் காலையில் வந்தவன் அங்கிருந்த ரிஷப்ஷனில் அவளின் பெயரை சொல்லி விசாரிப்பதும் அதற்க்கு அங்கிருந்த பெண் இவனை நோக்கி கையை காட்டுவதும் தெரிந்தது.
இவனை நோக்கி வேகமாக வந்தவன், "சார் பவித்ரா?? பவித்ராவுக்கு என்னாச்சு? ஆபீஸ்ல செக்கியூரிட்டி சொன்னாரு" அவனின் முகம் எல்லாம் வியர்த்து பதறி பயந்து போயிருந்தான்.
"அது...அது வந்து..டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க" என்ன சொல்வதென தெரியாமல் சத்யா தடுமாற," கடவுளே மறுபடியும் மறுபடியும் எதுக்கு இந்த பொண்ணை கஷ்ட படுத்தற " தன் போக்கில் புலம்பியபடி அவன் அருகே அமர்ந்தான் அவன்.
பின் சத்யாவிடம் திரும்பியவன், "சார் நீங்க?" எனவும், "நான் பவித்ராவுடைய மேனேஜர்." என்றான் சத்யா.
"ரொம்ப தேங்க்ஸ் சார். இவ்ளோ தூரம் உதவி பண்ணிருக்கீங்க" அவன் நன்றி சொல்லவும் இவன் வெறும் தலை அசைப்புடன் அதை ஏற்று கொண்டான். அதற்குள் மருத்துவர் வெளியே வரவும் இருவரும் அவரிடம் சென்றனர்.
"நத்திங் டு ஒர்ரி. ரொம்ப வீக்கா இருக்காங்க...இன்னும் ஒரு டூ ஹௌர்ஸ்ல கண் முழிச்சிடுவாங்க. அதிர்ச்சில வந்த மயக்கம் தான். பட் கண்டிப்பா ஒரு டூ வீக்ஸ் பெட் ரெஸ்ட் எடுக்கணும். அப்பறம் சில மெடிசின்ஸ் எழுதி தரேன். தவறாம கொடுங்க" என்றவர் அங்கிருந்தது நகர்ந்தார்.
அருகில் இருந்தவனை பார்த்தான் சத்யா. அவன் ஏதோ யோசித்து கொண்டிருந்தான்.