அமர்ந்திருப்பதை கண்டதும் தன் கையில் இருந்த மருந்து பைகளை அங்கே வைத்தவன் வெளியே சென்றான். அவனுக்கு அவளை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது. பவித்ராவுக்கோ அவனை கொஞ்சம் கூட பார்க்க பிடிக்கவில்லை.
இருவரையும் பார்த்தவர், மெல்லிய புன்னகையுடன் பவித்ராவின் கையை பற்றினார் இதமாக.
"பவிம்மா, அப்படி கூப்பிடலாம்ல?" அதே புன்னகையுடன் கேட்டவரை கண்டதும் அவளையும் அறியாமல் அவள் முகம் இளகியது.
"கூப்பிடுங்கம்மா " -பவித்ரா
"நான் யாருனு கேட்டில" அவரின் கேள்விக்கு ஆமாம் என தலை அசைத்தாள்.
"என் பேரு லட்சுமி. சத்யாவுடைய அம்மா" என்றதும் அவளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
"என்ன ஷாக்காயிட்டே... உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேக்க மாட்டேன். அது நீங்க தான் பேசிக்கணும். அவன் தப்பு பண்ணிருந்தா அவன் உன்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கணும். அவனுக்காக நான் வக்காலத்து வாங்க இங்க வரலை." அதே புன்னகையுடன் சொன்னவர், "நான் அப்பறம் எதுக்கு வந்துருக்கேன்னு யோசிக்கிற..அப்படித்தானா... ?" அவளின் குழம்பிய முகத்தை பார்த்தவர் தொடர்ந்தார். "நான் உனக்காக தான் வந்தேன். உன்னை டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா கண்டிப்பா ஒரு ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுக்கணும். நீ ஆபீஸ் எல்லாம் போகக்கூடாது. சோ நீ என் கூட என் வீட்டுக்கு வர. நான் இந்த ரெண்டு வாரமும் உன்னை பார்த்துக்க போறேன்." அவர் சொல்லவும் அதிர்ந்த விழிகள் விரிய அவரை பார்த்தவள், "வேண்டாம் மா. நான் முருகன் அண்ணாவை வர சொல்லிடறேன். அவர் என்னை ஹாஸ்டெல்ல விட்ருவார். நான் பார்த்துக்கறேன்" ஏனோ அவளால் அவரிடம் எடுத்தெறிந்து பேச முடியவில்லை. மெதுவாக சொன்னாள்.
"பவிம்மா. நீ என்னை அம்மானு நெஜமாவே உணர்ந்து கூப்பிடறியா இல்ல ஒரு மரியாதைக்காக கூப்பிடறியானு தெரில. ஆனா எப்படி நினைச்சு கூப்டுருந்தாலும் சரி, நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு உள்ள மரியாதைக்காகவாச்சும் நான் சொல்றதை கேளு. சத்யாவை நெனைச்சு நீ தயங்குனா, அதுக்கு நான் பொறுப்பு. அவன் உன்னை எந்த வகைளையும் தொல்லை பண்ணமாட்டான் " -லட்சுமி பொறுமையாக அதே சமயம் தெளிவாக சொன்னார்.
"இல்லைம்மா. நான் ஹாஸ்டல்ல இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது. " -பவித்ரா