வெளிய காத்திருக்க வேணாம்னு ஒரு போனு வாங்கிக்கிச்சு. போன் பண்ணி கேட்டுட்டு வாங்க அண்ணா. வந்து வெயிட் பண்ண வேண்டாம்னு சொல்லுச்சு சார். போன் பண்ணி எடுக்கலைனு தான் நான் ஆபீஸ் போனேன்" முருகன் சொல்லி முடிக்க, சத்யா அமைதியாக அமர்ந்திருந்தான்.
என்னவெல்லாம் நினைத்தான் அவளை பற்றி, எப்படி எல்லாம் திட்டினான். தன்னுடைய கண்மூடி தனமான கோபம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். இதற்க்கெல்லாம் என்ன பரிகாரம் செய்வாய்? அவன் மனம் கேள்வி கேட்க ஒரு முடிவிற்கு வந்தவன், முருகனிடம் சொல்லிவிட்டு தன்னுடைய கையில் இருந்த மொபைலில் யாரையோ அழைத்தவாறு சென்றான்.
பவித்ராவுக்கு தலை எல்லாம் பாரமாக இருந்தது. யாரோ இமைகளை பிரிக்க விடாமல் அழுத்துவது போல இருந்தது. அவளின் தலையில் ஆதரவாக ஒரு கரம், மெல்ல வருடி கொடுத்தது. அவளின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.
"அம்மா"
"பவித்ரா" ஒரு குரல் தொலைவில் ஒலிப்பதை போல இருந்தது.
"அம்மா அம்மா" கண்களை திறக்க முயன்றாள். முடியவில்லை. மெல்ல முயற்சித்தவள் கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள்.
அவள் அருகே ஒரு உருவம் மங்கலாக தெரிந்தது. மெல்ல கண்களை மூடி மீண்டும் திறந்தாள். இப்போது அந்த உருவம் தெளிவாக தெரிந்தது. சாந்தமான அந்த முகத்தில் புன்னகை இருந்தது. ஒரு கையால் அவளின் தலையை கோதி விட்டவர், மறு கையால் அவள் கன்னத்தை வருடினார்.
"பவித்ரா எப்படி இருக்கு இப்போ?" அவரின் குரலில் இருந்த கனிவு, அவரின் முகத்தில் இருந்த அமைதி இதெல்லாம் பவித்ராவுக்கு அவளின் அம்மாவை நினைவு படுத்தியது.
"நல்லாருக்கேன் மா" அவளையும் அறியாமல் பதில் வந்தது. மெல்ல எழுந்து அமர முயன்றவளை கை பிடித்து உட்கார வைத்தவர், அவளின் முதுகில் சாய்வாக ஒரு தலையணையை வைத்தார்.
"இதை குடி பவித்ரா" என்று ஒரு டம்பளரில் பழச்சாறு கொடுக்கவும் அவள் தயக்கத்துடன் வாங்கிகொண்டாள்.
அவள் குடித்து முடிக்கும் வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தார்.
"ரொம்ப தேங்க்ஸ் மா. நீங்க?" -பவித்ராவுக்கு அவரை யார் என்று தெரியவில்லை. அவர் பதில் சொல்லும் முன் அந்த அறையின் கதவு திறக்கவும் உள்ளே நுழைந்த சத்யா, பவித்ரா