"இல்லை...அது...தேங்க்ஸ் சார்" ஒரு வழியாக சொல்லவந்ததை சொல்லி விட்டாள் பவித்ரா.
எதற்கு என்பது போல ஏறி இறங்கியது அவனது புருவங்கள்.
"இல்லை, நீங்க பைவ் லேக்ஸ் ஆஸ்ரமத்துக்கு கொடுத்தது எனக்கு இன்னைக்கு தான் தெரியும். அதுக்கு தான்" அவள் தன்னிடம் பேசிய நீண்ட சொற்றொடர் என்று மனதில் நினைத்தவன் ஒரு புன்னகையுடன் தலையசைத்துவிட்டு சென்றான். கதவின் அருகே சென்றவன், "குட் நைட் பவி" எனவும் "குட் நைட்" சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னவளை அதே புன்னகையுடன் பார்த்தவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
"அக்கா, அந்த மாமா குட் நைட் தான சொன்னாங்க, நீ ஏன் அதுக்கு இவ்ளோ நேரம் யோசிக்கிற?" அப்போது தான் உமா அங்கிருப்பதே உரைத்தது பவித்ராவுக்கு. அவளின் கேள்வியை ஒதுக்கியவள், "மாமான்னு எல்லாம் சொல்லாத உமா. சார் னு கூப்டு" என்றாள் கண்டிப்புடன்.
"போக்கா அந்த மாமா தான் அப்படி கூப்பிட சொன்னாங்க. சார் சார்னு சொல்றது எனக்கே ஒரு மாதிரி இருக்கு. எங்க ஸ்கூல் கெமிஸ்ட்ரி சார் ஞாபகம் வருது. வேண்டாம் வேண்டாம் நான் மாமானே கூப்பிடறேன்" என்றவளுடன் விவாதிக்கும் மனநிலையில் இல்லை பவித்ரா.
ஒரு பெருமூச்சுடன் அந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள். இவன் எதற்கு உமாவை மாமா என்றெல்லாம் அழைக்க சொன்னான், இன்னும் இருக்க போவது ஒரு வாரமோ பத்து நாட்களோ அதில் இதெல்லாம் தேவையா என்று குழப்பம் வந்தது பவித்ராவுக்கு. அவன் பவி என்று அழைத்தது அவளுக்கு பிடித்தமானதாக இல்லை. அதே சமயம் ஏனோ அவனின் முகத்தில் அடித்தாற்போல பேசவும் முடியவில்லை. சொல்லாமல் விட்டால் அவன் அப்படியே அழைக்க கூடும். வேண்டாம் எப்படியாவது சீக்கிரமே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எண்ணியவள் "உமா படிச்சது போதும். லேட்டாகுது.எடுத்து வெச்சுட்டு தூங்குடா." உமாவிடம் சொல்லிவிட்டு படுக்கையை சரி செய்தாள்.
"சரிக்கா" என்றவள் அவளுடைய புத்தகத்தை எடுத்து பையில் வைக்க செல்லுகையில் அதில் இருந்து ஏதோ ஒரு பேப்பர் பறந்து வந்து பவித்ராவின் காலடியில் விழுந்தது.
அதை குனிந்து எடுத்தவள் அது ஏதோ ஒரு போட்டோ என்பதை உணர்ந்து திருப்பி பார்த்தாள். அந்த புகைப்படத்தை கண்டவள் உடல் எல்லாம் தீப்பற்றியது போல இருந்தது.கண்களில் இருந்து சூடாக கண்ணீர் கன்னங்களில் இறங்கி வழிந்தது.