உறவெல்லாம் வெறும் கடமை மட்டும் இல்லை. நம்ம துன்பங்களை பகிர்ந்துக்க கூட தான். உன் மனசுல இருக்கற பயம், குழப்பம், தனிமை இதெல்லாம் ஷேர் பண்ணிக்கோ பவி. என்கிட்டே பண்ணுனு சொல்லல. உனக்கு மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட பண்ணிக்கோ. அந்த பிரச்சனை தீர்ந்திடும்னு சொல்ல மாட்டேன். ஆனா அந்த பிரச்னையை சமாளிக்க ஒரு தைரியம் கிடைக்கும்" அவளின் தலையை கோதியவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் தலையை குனிந்து அமர்ந்திருந்தாள் பவி.
"உன் மனசை ஏதோ ஒண்ணு கஷ்டப்படுத்துது...அது என்னனு என்கிட்டே சொல்லுடா. உன் அம்மா மாதிரி நெனைச்சுக்கோ பவி" சொன்னவரை "அம்மா" என அணைத்து கொண்டாள் பவித்ரா.
அவளை சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தினார் லட்சுமி. பின் நிமிர்ந்து உட்கார்ந்தவள் ஒரு பெருமூச்சொன்றை எடுத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
"என் ஊரு மஞ்சம்பட்டினு ஒரு மலைக்கிராமம். அங்க இருந்த நூறுக்கும் குறைவான குடும்பங்கள்ல எங்களுதும் ஒண்ணு. எங்க அம்மா பேரு காவேரி. எங்க அம்மா ரொம்ப அழகு" சொன்னவள் கண்கள் தன் அன்னையை கண்முன்னே கொண்டு வர முயல எழுந்து அங்கிருந்த ஜன்னலின் அருகே சென்று நின்றாள்.
"என் அப்பா பேரு பாலன். எங்க அம்மா பிறந்தது வளர்ந்தது எல்லாம் அந்த கிராமத்துல தான். அங்க இருந்து பத்து கிலோமீட்டர் நடந்து போனா தான் பள்ளிக்கூடம். பெரிய வசதி எதுவும் இல்ல எங்க ஊருல. பள்ளிக்கூடம் ஹாஸ்பிடல் எல்லாமே தூரம் தான். அதனாலேயே நெறய பேரு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அந்த மலையில இருந்து இறங்கி தான் தொழிலுக்கு போவாங்க. எங்க அப்பா அங்க ஏதோ பக்கத்துல இருந்த டவுன்ல இருந்து வந்தவர். எங்க ஊருல மிளகு ரொம்ப பேமஸ். அது மொத்த விலைக்கு வாங்க வந்தவர் அம்மாவை பார்த்து புடிச்சு போயி கட்டிக்கிட்டார். அவரு மட்டும் அடிக்கடி பட்டணம் போயிட்டு வருவாரு. எங்க அம்மா அப்பாக்கு கல்யாணம் ஆயி ஒரு வருஷம் அப்பறம் நான் பொறந்தேன். எல்லாமே நல்லா போயிட்டு இருந்துச்சு எனக்கு ரெண்டு வயசாகற வரைக்கும். அப்பறம் திடிர்னு அப்பா ஊருக்கு வரது குறைய ஆரம்பிச்சுது. அம்மா கேட்டதுக்கு வியாபாரம் நல்லா வளந்துருச்சு வேலை அதிகம்னு சொன்னாரு. அப்படியே மாசம் ஒருமுறை , ரெண்டு மாசம் ஒரு முறைனு வந்தவர், அப்பறம் மூணு மாசம் வரவே இல்லை. அப்பறம் ஒரு நாள் வந்தார். அம்மா அப்போ கர்ப்பமா இருந்தாங்க. நான் பொறக்கும்போதே அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அதனால இந்த பிரசவத்துக்கு டௌன்லயே நல்ல ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போக சொன்னாங்க ஊர்க்காரங்க. சரி நான்