தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 26 - சாகம்பரி குமார்
"இப்போது நான் என்ன பேசப் போகிறேங்கிறது இங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதிதி உனக்கு மட்டும் தெரியாது!. இந்த விஷயம் ரொம்ப முக்கியமானது. இதை நீ சரியா புரிஞ்சிக்கிட்டாதான் எங்களுக்கு நீ உதவ முடியும். அதுதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நீ நான் இப்ப பேச போறத கவனமா கேட்டுக்கோ."
அதிரதன் பீடிகையுடன் பேச்சை ஆரம்பித்தான். கங்காதரன் மற்றும் வினய் முகத்தில் தெரிந்த சீரியஸ்னஸை கவனித்த அதிதி குழப்பத்துடன் அவனுடைய பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்.
"அதிதி நான் உன்னிடம் இப்பொழுது இரண்டு விஷயங்களை பற்றி கேள்வி கேட்கப் போகிறேன். நாம் காட்டில் இருந்த பொழுது இன்றைய மரபணுவியல் ஆராய்ச்சிகளை பற்றியும்… ஏற்கனவே வெற்றிகரமாக நடந்த ஆராய்ச்சிகளைப் பற்றியும் உன்னிடம் சொல்லி இருக்கிறேன். உனக்கு என்ன புரிந்தது என்பதை இப்பொழுது சொல்."
இதை கேட்ட கங்காதரன் திடுக்கிட்டார் அடப்பாவி, காட்டில் போய் க்ளாஸ் எடுத்தானா?.. அதுவும் ஜீன் ஆராய்ச்சி பற்றியா?. இவன் என்னைக்குதான் தேற போகிறான் தெரியலையே!. இதற்கு அதிதி என்ன சொல்லப் போகிறாளோ?." என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்.
"எனக்கு புரிந்த வரையில் மரபணுவில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வரவும் முடியும்… தேவையில்லாத விவரங்களை எடிட் செய்யவும் முடியும். இதனால் நாம் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும். அப்புறம் அந்த மாதிரி மாற்றங்களை மரபணுவில் பதிய வைப்பதற்கு வைரஸ்களை பயன்படுத்தலாம் என்று நீங்கள் சொன்னது நினைவில் உள்ளது'
'ஹா… மருமகள் அறிவான பொண்ணுதான் போல் இருக்கிறதே.. அவன் சொன்னதை கவனிச்சது தெளிவா தெரியுதே..' கங்காதரன் மனதிற்குள் வியந்தார். அதே சமயத்தில் அதிரதன் பேச ஆரம்பித்தான்.
"நீ சொல்வது சரிதான் அதிதி. அது போன்ற வைரஸ்களை பயன்படுத்தும் பொழுது அதை செயலிக்க செய்து பயன்படுத்துவோம். சில சமயம் அது உயிர் பெற்று விட்டால் தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். அது போன்ற ஒரு ஆராய்ச்சி பதினைந்து வருடங்களுக்கு முன் நடைபெற்றது..