வேண்டும்… நம்பிக்கைக்கு உரியவர்கள்… அவர்கள் சொன்னால்தானே கேட்பாங்க"
"ஆமாம் நீங்க ஆதரவற்ற பெண் என்றல்லவா சொன்னீர்கள். யாரை வைத்து பேச முடியும்?"
"அந்தப் பெண்ணுடைய சகோதரி சொன்னால் ஒருவேளை கேட்கலாம். ஏனெனில் இத்தகைய மோசமான உடல் நிலை இருக்கும் பொழுதுகூட ஒவ்வொரு இரவும் காட்டிலிருந்து நீண்ட தொலைவு பயணம் செய்து வந்து தன்னுடைய சகோதரியை பார்த்து செல்வாங்க.. உறங்கிக்கொண்டிருக்கும் சகோதரியின் தலையை வருடி அவள் அருகில் இரவை கழித்து நிம்மதியடைவாங்க. தன் சகோதரிக்கு ஆபத்து வந்த பொழுது கூட முழு முயற்சி எடுத்து அவளையும் அவள் கணவனையும் காப்பாற்றியிருக்கிறார்." அவன் சொல்லும்போதே அதிதி உறைந்து போனாள்.
"நீங்க யார சொல்றீங்க?" என்று வினவினாள். கேட்கும் பொழுதே அவளுடைய குரல் நடுங்க ஆரம்பித்தது.
"உன்னிடம் நான் வேறு யாரைப் பற்றிப் பேசமுடியும். அதிதி, உன் சகோதரி அபிதா பற்றித்தான் பேசுகிறேன். மலையிலிருந்து நீங்கள் மூவரும் குதித்த பொழுது… நீ மரக்கிளையில் சிக்கி தப்பிய அதே சமயத்தில் உன் சகோதரியும் ஆற்றில் விழுந்து மறு கரையில் ஓரமாக ஒதுங்கி விட்டார். அந்த தற்கொலை முயற்சியில் இறந்துபோனது உன்னுடைய அப்பா மட்டுமே. ஆற்றின் மறுகரையில் மயக்கத்தில் இருந்த உன் சகோதரியை அந்த ஏஜன்ட் எடுத்துக்கொண்டு போய் அந்த கொடூரமான மனம் படைத்த ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து விட்டான்".
மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பாதவள்போல் அதிதி காதுகளைப் பொத்திக் கொண்டு தலை குனிந்து கதற ஆரம்பித்து விட்டாள்.
"போதும்.. இனிமேல் நான் எதையும் கேட்க முடியாது.. என்னால் இதையெல்லாம் தாங்க முடியவில்லை.. அபிக்கா… அபிக்கா…" என்று அழ ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு இரவும் அன்னையின் வருடலாக அவளை தழுவியது அபிக்காவா…? ஆபத்தில் அவளை காப்பாற்றியது அம்மாவின் ஆத்மா இல்லை.. அது அபிக்காதான்…!.