அதிர்ச்சியுடன் கேட்டான்.
" எனக்கு அதைவிட இந்த ஆராய்ச்சியை நல்லபடியாக முடிப்பது தான் முக்கியம்" என்று கூறியவன்….
"இந்த திட்டத்தில் நான் உங்களுக்கு உதவியாளராக இருக்கலாமா?"
"வேலையை விட்டுவிட்டு எனக்கு உதவியாளராக இருக்கப் போகிறாயா ஏன்?." அவனை ஆச்சரியமாக அதிரதன் கேட்டான்.அதற்கு வினய்,
" அதுபற்றி உங்களிடம் விளக்கம் சொல்ல வேண்டுமெனில் என்னுடைய சிறுவயது காலத்தைப் பற்றி நான் பேச வேண்டும். அது ஒரு பெரிய கதை. அதைவிட ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் இறந்துபோன என்னுடைய சிறிய வயது தோழிக்காக நான் செய்யும் ஆத்மார்த்தமான சமர்ப்பணமாக இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் எண்ணுகிறேன். அபியை முற்றிலுமாக குணப்படுத்தினால் என்னுடைய தோழியின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன்."
"இல்லை வினய், நீ சொல்வதை நான் அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் உன்னுடைய இந்த உத்தியோகம் மிகவும் உயர்வானது. அதைவிடுத்து என்னிடம் உதவியாளராக இருந்த விருப்பம் தெரிவிப்பதற்கு சரியான காரணத்தை சொல்ல வேண்டும். பிறகுதான் அதை அனுமதிக்க முடியும்" என்று அதிரதன் கூறினான்.
அதிரதனை தீவிரமாக வெறித்துப் பார்த்த வினய் தொண்டையை செருமிக்கொண்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்.
"ஓகே… பாஸ், அந்த விஷயத்தை நான் உங்களிடம் இப்போது சொல்கிறேன். அது என்னுடைய சிறுவயது தொடர்புடையது. என்னுடைய சிறுவயதில் நான் மும்பையில் இருந்தேன். என்னுடைய பெற்றோர்கள் பொருளாதாரத்தில் மிகவும் தாழ்வான நிலையில் இருந்தார்கள். மும்பையில் முறுக்கு சுட்டு வியாபாரம் செய்த சிறு குடும்பம் எங்களுடையது. அம்மா அப்பா மட்டுமே அங்கிருந்தனர். என்னுடைய சொந்த ஊர் தமிழகம் பக்கம்தான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். எனக்கு ஏழு வயது இருக்கும் பொழுது என்னுடைய அப்பா வியாதி வந்து இறந்து போனார். அதன் பிறகு அம்மா என்னை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தார்கள். இங்கு யாரும் துணைக்கு இல்லாத நிலையில் அவரும் ஒரு