ஆரம்பித்திருக்கிறார்கள்.
"சரி வினய், இந்த விஷயத்தில் நீ எனக்கு உதவியாக இருப்பது நல்லதுதான். என்னால் இதை இன்னும் விரைவாகவும் சரியாகவும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி. நாம் இப்பொழுது உறங்கச் செல்லலாம் என்று நினைக்கிறேன். காலையில் சந்திப்போம் என்று அவனிடம் விடை பெற்றான்."
அதிரதனிடம் 'இரவு வணக்கம்' சொல்லி உறங்க சென்ற வினய்க்கு உறக்கம் வரவில்லை. அவனுடைய நினைவுகள் சிறுவயதில் நடந்த சம்பவங்களுக்கு இடையில் உழன்று... அவனுக்கு வேதனையை தந்து கொண்டிருந்தன. அந்த இரவு அவனுக்கு உறங்கா இரவாக ஆனது.
அதே நேரத்தில் அதிதியின் தாத்தா வீட்டில் அஞ்சலை தனித்து இருளில் வெறித்தபடி அமர்ந்திருந்தாள். பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்டபடி அதிதி அந்த வீட்டை காலி செய்து தரவும்… மிகவும் சந்தோஷத்துடன் அன்று மாலையே அஞ்சலை தன் குடும்பத்துடன் அங்கு குடி வந்து விட்டாள்.
அது அவளுடைய நீண்ட நாள் கனவு!. தனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்த ஒரு விஷயம் என்று அவளுக்கு கிடைத்துவிட்டது….
அதிதிக்கும் அவளுக்கும் ஆக இருந்த ஒரு பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிதியை மறந்து விட்டு மகிழ்வுடன் இனிமேல் வாழ்நாளை அந்த வீட்டில் கழித்தால் போதும் என்று நினைத்தாள்.
ஆனால் அவளால் அவ்வாறு நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏனெனில் அந்த வீட்டிற்குள் வரவும் துளசியின் நினைவு அவளுக்கு வர ஆரம்பித்து விட்டது. இந்த வீட்டிற்கு முதல் முதல் துளசிதான் மருமகளாக வந்தாள். பிறகுதான் அஞ்சலை மருமகளாக வந்தாள். அவள் இந்த வீட்டிற்குள் நுழைந்த முதல் நாள் நடந்த சம்பவங்களில் இருந்து ஒவ்வொன்றும் அவளுக்கு நினைவு வந்தது.
அவள் மணம் முடித்து இந்த வீட்டிற்கு முதல் முதலாக வந்த பொழுது அவளுக்கு ஆரத்தி எடுத்து அவனை வரவேற்றது துளசிதான்…
பிறகு அந்த வீட்டின் நடைமுறைகளை அவளுக்கு சொல்லித்தந்தது துளசி தான்….