மனசாட்சி பேசாத வரையில்தான் மனிதர்கள் மிருகங்கள் ஆக இருக்க முடியும். மனசாட்சி பேச ஆரம்பித்துவிட்டால் மனிதத்துவத்தை அவர்களால் உணர முடியும். அது அவர்கள் செய்த கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி தண்டனை தர துடிக்கும். ஆத்மாவை வலிக்க வைத்து தனக்குத்தானே தண்டனையை தந்து கொள்ள தீர்மானிக்க வைக்கும். அது ஒரு மோசமான நிலையாகும். அந்த நிலையில் இப்பொழுது அஞ்சலை இருக்கிறாள்.
கனத்த இதயத்துடன் அந்த வீட்டை பொறுமையாக சுத்தி பார்க்க ஆரம்பித்தாள்.
ஒரு காலத்தில் மிகவும் மதிப்புமிக்கதாகவும் அவளுக்கு கைக்கு எட்டாத கனவாகவும் தோன்றிய அந்த வீடு… இப்பொழுது துளசியின் பிம்பத்தை எல்லா இடத்திலும் எதிரொலித்து அவளை நிலைகுலையச் செய்தது.
தனக்குள்ளேயே அழுது புலம்பி தவித்துப் போன மணித்துளிகளின் முடிவில் அவளால் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது. கொலை செய்வதற்கு கூட சரியான காரணம் வேண்டும். ஆனால் அவள் செய்தது மகாபாதகம். அதற்கு சரியான தண்டனை தர எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
விடிவதற்கு சற்று முன்பான பின்னிரவு நேரத்தில் அவள் ஒரு முடிவிற்கு வந்து, வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினாள். அவள் நடந்து சென்ற இடம்…. துளசி இறந்து போன அதே புளியமரத்தடிதான். அதே இடத்தில்தான் அவள் செய்த தவறுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்பினாள்.
அவளுடைய முடிவிற்கான காரணத்தை கையில் வைத்திருந்த கரிக் கட்டையால் அந்த புளிய மரத்தின் அருகிலிருந்த சுமை தாங்கி மேடையின் மீது எழுதி வைத்துவிட்டு.. துளசி எடுத்த அதே முடிவை எடுத்துக் கொண்டாள். அவள் அந்த புளியமரத்தில் என்ன எழுதியிருந்தாள் என்றால்…
'தன்னுடைய சுயநலத்திற்காக ஒருவருடைய வாழ்க்கையை அழிப்பது பெரிய பாவம். மனம் வலித்து மன்னிப்பு கேட்டாலும் அதற்கான தண்டனையை மனசாட்சி கூட அறியாது. அந்த பாவத்தை மீண்டும் ஒரு பிறவி எடுத்துதான் சரி செய்ய வேண்டும். நான் துளசிக்கு நியாயம் செய்வதற்காக மீண்டும் ஒரு பிறவி எடுப்பேன்.'
தொடரும்
Next episode will be published on 7th Apr. This series is updated weekly on Tuesday Evenings.