"எனக்கு புரிகிறது. நான் என்னுடைய முழு முயற்சியை செய்வேன். அபி அக்காவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறேன்."
அதிதி தெளிவாகக் கூறினாள். அவள் பொறுப்புடன் பேசுவது அவனுக்கு புரிந்தது. இனி அவள் சமாளித்து விடுவாள் என்று தோன்றியது.
"நல்லது அதிதி. நான் நிறைய பேச வேண்டிய தேவை இருக்கும் என்று நினைத்தேன். அப்படி இல்லை நீ எளிதாக புரிந்து கொண்டாய். நாம் நாளை காலை க்ருபா வீட்டிற்கு செல்வோம். இப்பொழுது கொஞ்சம் தூங்கி எழுந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன். காலையிலிருந்து அடுத்தடுத்த வேலைகள். சோர்வாக இருக்கிறது. எனவே நாம் கொஞ்சம் ஓய்வு எடுப்போம். நீ உறங்க செல்." என்று சொல்லிவிட்டு கங்காதரனும் எழுந்தார்.
"குட் நைட் டாட். நீங்க தூங்க போங்க. நான் வினயோட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்." என்று அதிரதன் அங்கேயே இருந்தான்.
அதிதியும் கங்காதரனும் கிளம்பி சென்ற பிறகும்கூட அங்கே அமைதி நிலவியது. ஏனெனில் வினய் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிரதன் அவனை வியப்பாகப் பார்த்தான்.
ஏன் அவனுடைய கண்கள் இருளில் வெறித்துக் கொண்டிருக்கின்றன?. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறான்!. அப்படி இருந்தாலும் அந்த முகம் ஏன் களை இழந்து போயிருக்கிறது? என்று யோசித்தான்.
"வினய் நீ என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?. மேற்கொண்டு என்ன செய்வது என்று நினைக்கிறாயா?. நாம் அந்த ப்ராஜெக்ட் குறிப்புகளை படித்து அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடுவோம். அதற்காக நீ இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம் ரொம்பவும் பதட்டமாக தெரிகிறாய்… வேறு எதுவும் உனக்கு பிரச்சனை இருக்கிறதா?" என்ற அதிரதன்,
"ஓ... உன்னுடைய ட்ரான்ஸ்ஃபர் விஷயம் இருக்கிறது அல்லவா… அதை நான் மறந்து விட்டேன். நீ எப்பொழுது அங்கு டியூட்டி ஜாயின் செய்ய வேண்டும்?." என்று கேட்டான்.
" நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டேன்" என்று வினய் கூறினான்.
"வேலையை விட்டு விட்டாயா!. ஏன் இவ்வாறு செய்தாய்?." என்று அதிரதன்