அந்த வீட்டில் அவள் இருந்த ஒவ்வொரு நாளும் துளசிதான் அவளுக்கு உதவியாக இருந்தாள். அவள் செய்த சிறு சிறு தவறுகளைக் கூட மறைத்து மன்னித்து அவளுக்கு உதவி செய்தாள்…
அந்த நாட்களில் அஞ்சலைக்கு சமைக்கவும் தெரியாது… குடும்ப பொறுப்பை கவனிக்கவும் தெரியாது… அதனை சரிசெய்து உதவியது துளசிதான். பிறகு துளசி குழந்தை பெற்ற பிறகும் கூட அவள் அஞ்சலையை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதும் நினைவிற்கு வந்தது.
அஞ்சலை முதல் குழந்தையை சுமந்த பொழுதுகூட துளசிதான் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தாள். பிள்ளை பேற்றிற்காக தாய் வீட்டுக்கு சென்று திரும்பி வந்த அஞ்சலைக்கு துளசியின் மீது காரணமில்லாத வெறுப்பு வளர ஆரம்பித்தது. ஏனெனில் அந்த வீட்டிலும், அந்த குடும்பத்திலும் துளசியின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. அது அவளை எரிச்சலூட்டியது.
அதன்பிறகுதான் அஞ்சலை அந்த வீட்டை விட்டு வெளியேறும் நிலை வந்தது. இது அத்தனையும் சேர்ந்துதான் துளசியின் மீது அஞ்சலைக்கு வெறுப்பை அதிகரித்தது. அந்த வெறுப்புதான் அவளுடைய அம்மா கன்னியம்மாவை தூண்டிவிட்டு துளசிக்கு அந்த மகாபாதகத்தை செய்ய வைத்தது.
வாழ்நாள் முழுவதும் தெரிந்து கொள்ளாத பாடத்தை சத்தியமான சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அந்த இரவு நேரம் அவளுக்குள் இருந்த நினைவுகளை கிளறியது. துளசிக்காக அவளுடைய மனசாட்சி வாதாடத் தொடங்கியது. யோசித்துப் பார்த்தால் துளசி அவளிடம் நல்லபடியாகவே சகோதர பாசத்துடன் பழகியிருந்தாள். அஞ்சலைதான் அவளிடம் வெறுப்பை வைத்திருந்தாள்.
அத்துடன் அவளுக்கு அதிதியின் மீது இருந்த வெறுப்பு… அதனால் அவள் செய்த செயல் அத்தனையும் நினைவிற்கு வந்து அவளிடம் நியாயம் பேச ஆரம்பித்தது.
அவள் செய்த தவறுகளுக்கு அவளாலே விளக்கம் தர முடியாத ஒரு மோசமான சூழலில் சிக்கிக் கொண்டாள்