சோகமாக சொன்னான். அவனுடைய அருகாமை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவள் சுதாரிக்கும் முன்பே அவன் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான். ஒருவேளை தன்னுடைய வேதனையை மறைப்பதற்காக அவன் அங்கிருந்து சென்றான் என்று தோன்றியது.
ரொம்பவும் வெளியுலக பழக்கமில்லாத அதிதிக்கு அவனுடைய செயல் பல சந்தேகங்களை கிளப்பியது. அவன் எதற்காக அவளை அரவணைத்து பேசினான்?. அவனுடைய வேதனையை அவளிடம் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ஜெனிட்டாவின் நினைவில் அவளை அணைத்தானா?. என்ற குழப்பம் அவளுக்கு மேலிட்டது.
உண்மையில் அந்த ஜெனிட்டா யார்… உதவியாளரா… அவனுடைய அணைப்பில் இருந்த இறுக்கம் அப்படி சொல்லவில்லை… ஈடு செய்ய முடியாத இழப்பை உணர்த்தியதே.. அவனுடைய தோழியா…? இல்லை… இல்லை.. நினைக்கவே நடுங்கியது… காதலியா?
அவனிடமே நேரடியாக கேட்டு விடலாம்.. அவன் ஆமாம் என்று சொல்லி விட்டு.. மீண்டும் மீண்டும் ஜெனிட்டாவை பற்றியே பேச ஆரம்பித்தால் அவளால் சகிக்கவே முடியாது.
அவளுடைய அத்தனை கவலைகளையும் தாண்டி ஒரு எண்ணம் வலுபட்டது.
ஜெனிட்டாவின் நினைவினால் அவன் மிகுந்த வேதனையில் இருக்கிறான்.. அவனை அமைதிபடுத்துவது அவளுடைய கடமை!.
கடமை உணர்வு பொங்க பொறுப்புடன் நடந்து கொள்ள நினைத்து அதிதி அவனைத் தேடிச் சென்றாள்.
அதிரதன் வெளியே தென்னந்தோப்பில் அமர்ந்திருந்தான். அவனுடைய பார்வை வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. அவளுக்கு 'ஐயோ பாவம்' போல தோன்றியது.
அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் வருவதை உணர்ந்த அவன் திரும்பி பார்த்தான்.
"என்ன விஷயம் அதிதி?" என்று கேட்டான்.
"அது.. உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்" என்றாள்.