பாரமாக ஆகிவிட்டது. அந்த பாரத்தை தாங்க முடியாமல் தான் அவள் மனது உடைந்து போய் விட்டாள்" என்று விளக்கினார்.
அப்போது குறுக்கிட்ட கங்காதரன்,
" அவர் சொல்வதும் சரிதான் அதிதி... உன்னால் உன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அது போலவே உன் சித்தியால் அவர்களுடைய இயல்பை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மனசாட்சி பேச ஆரம்பித்துவிட்டது. ஒருவேளை இனிமேல் உன்னை சந்தித்தால் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது செய்த பாவத்திற்கு பரிகாரமாக உன்னிடம் மண்டியிட்டு தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியிருக்கும். அந்த எண்ணங்களின் வீச்சை தாங்க முடியாமல் தான் உன்னை சந்திக்கும் தைரியம் இல்லாமல் இந்த முடிவை எடுத்துவிட்டார். அதற்கு துளசிக்கு செய்த பாவத்திற்கு பரிகாரம் என்று சொல்லிவிட்டார். உண்மையில் இது அவர்களுடைய இயல்பை மாற்றிக் கொள்ள முடியாததால் வந்த சிக்கல்தான்." என்றார்.
"கரெக்ட் அப்பா சொல்வது சரிதான். இது உன் சித்தியின் மனோபாவத்தில் எடுத்துக்கொண்ட முடிவுதான். இந்த முடிவுக்கு நீ காரணமாக போவதில்லை. நீ இந்த எண்ணத்தை உன் மனதிலிருந்து எடுத்து விடு. இனிமேல் உன் மனதில் அபியை பற்றிய எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று அதிரதன் மெல்லிய குரலில் சொன்னான்.
அஞ்சலையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் தோப்பு வீட்டிற்கு திரும்பினார். அந்த மாலை நேரத்தில் அதிதி தன் அமைதியாக அமர்ந்திருந்தாள். என்னதான் சொன்னாலும் அவளால் அஞ்சலையை மறக்க முடியவில்லை.
அவள் அருகில் வந்த அதிரதன், " இன்னும் அதையே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே. நீ மதியம் சாப்பிடவில்லை. இப்பொழுது கொஞ்சம் சாப்பிடு"
அவன் நீட்டிய தட்டில் இருந்த உப்புமாவை பார்த்துவிட்டு ஆச்சரியமாக,
" இதை யார் செய்தது?" என்று கேட்டாள்.
" இதை நான்தான் செய்தேன்" என்ற அதிரதன் அவள் முறைத்து பார்க்கவும்,
" இல்லை இல்லை அப்பாதான் செய்தார். அப்பா அருமையாக சமைப்பார்.