தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 29 - சாகம்பரி குமார்
அதிரதன் வகுத்த செயல்முறை திட்டத்தின்படி இனிமேல் தாதிப்பட்டியில் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அபியை குணப்படுத்த வேண்டும் எனில் அதிரதன், அதிதி, வினய் மூவருமே க்ருபாவுடன் சேர்ந்து அவர் வீட்டிலிருந்துதான் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் கங்காதரனுக்கு இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் அவர் அவர்களிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்றுவிட்டார்.
" எதுவும் தேவை என்றால் என்னை அழையுங்கள்" என்று சொல்லி சென்று விட்டார்.
அதிரதன் அவனுக்குத் தெரிந்த மருத்துவரை தொடர்பு கொண்டு ஸ்பெஷல் ஆம்புலன்சை அனுப்புமாறு சொல்லி இருந்தான். அது மறுநாள் மதியம் வந்து விடும். பிரச்சினை என்னவெனில்...
மலைப்பாதையில் கிருபாவின் வீடு இருக்கும் இடத்தை அது அடைவது சிரமம். எனவே சுற்றுப் பாதை வழியாகத் தான் அங்கு வர வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்காக அதிரதன் சென்று ஆம்புலன்சை அழைத்து வரவேண்டும் என்று நினைத்தனர். அதற்கு முன் கிருபா வீட்டிற்கு அதிதியும் வினையும் சென்று விட்டால் நல்லது என்று திட்டமிட்டனர்.
தலைவரிடம் உண்மையான விஷயத்தை சொல்லாமல் அவர்கள் அதிரதன் வீட்டிற்கு செல்வதாக சொல்லி விட்டு வீட்டை பூட்டி விட்டு கிளம்பி விட்டனர். அன்று மதியமே அவர்கள் கிருபாவின் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அபிக்கான மருத்துவ சிகிச்சைகளை ஆரம்பிப்பதற்கு அவளிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி அதிதி அவளிடம் விளக்கினால் நல்லது என்று அவன் நினைத்தான். எனவே அதிதியை அபியிடம் பேசுவதற்காக அனுப்பி வைத்தான்.
அபியின் அறைக்கு வெளியே நின்று அவர்கள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தான். அதிதி உள்ளே சென்று அபியிடம் நலம் விசாரிப்பது கேட்டது… பிறகு அவள் அபியின் மருத்துவ விஷயங்களை அறிவியல் பூர்வமாக விளக்கத் தொடங்கினாள். அதை அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லித் தந்தது போலவே சரியாகத்தான் பேசுகிறாள்.