இல்லை...
மைத்ரேயி முகம் அத்தனை சந்தோஷத்தை காட்ட, சுற்றி இருந்த பெரியவர்களின் முகம் அதிருப்தியை காட்டியது....
“என்னடா ரகு, எதுக்கு இப்போ அவளுக்கு அத்தனை காசை போட்டு இந்த பந்தை வாங்கிண்டு வந்த... அவளுக்கு உபயோகப்படறா மாதிரி எதையானும் வாங்க மாட்டியோ... திருப்பி கடைல கொடுத்துட்டு வேற ஏதானும் அதே காசுக்கு வாங்க முடியுமான்னு பாரு...”, ஷ்யாமளாவின் அத்தை சொல்ல, மைத்தியின் முகம் சோபை இழந்துவிட்டது...
மைத்தி அத்தையை கேள்வி கேட்க வாயைத் திறக்க போக, “குழந்தை கிட்ட கொடுத்ததை உடனே வாங்க வேண்டாம்... இதை பத்தி அப்பறம் பேசலாம்... சம்மந்தி குழந்தைக்கு ஆலத்தி எடுங்கோ... எத்தனை நேரம் நின்னுண்டே இருப்பா....” , காமாட்சி பாட்டி கூற, அத்தையும், மாமியுமாக ஆலத்தி எடுத்து அவளை அழைத்து சென்றனர்...
அடுத்த ஞாயிறு சொன்னபடியே துளசியின் தந்தை மைத்தியின் தந்தையை பார்க்க வந்தார்... எப்பொழுதும் போல அன்றும் இவர்கள் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பத்ரி அவரை அழைத்து வந்தான்... கூடவே துளசியும்...
“அத்திம்பேர் இவர் நாங்க பீச்ல கிரிக்கெட் விளையாடற இடத்துல அறிமுகமானவர்... மைத்தி விளையாடறதை பார்த்துட்டு உங்களண்ட பேசனும்ன்னு சொன்னார்... அதுதான் கூட்டிண்டு வந்தேன்...”, பத்ரி சொல்ல, தன்னிடம் என்ன பேச இருக்கிறது என்ற நினைப்புடனே அவரை வரவேற்றார் அனந்து...
“வணக்கம் சார்... என்னோட பேர் கண்ணன்... நான் சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலை செய்யறேன்...”
“நமஸ்காரம்... என்னோட பேர் அனந்து... LIC-ல வேலை பார்க்கறேன்... உங்களை சந்திச்சதுல சந்தோஷம்...”
“காப்பி எடுத்துத்கோங்கோ...”,சியாமளா உபசரிக்க, சற்று சங்கோஜப்பட்டபடியே எடுத்தார் கண்ணன்
“சாரி வீட்டுல ஏதோ விசேஷம் போல இருக்கு... நான் வந்து தொந்தரவு பண்ணிட்டேனோ... விருந்தாளிங்க எல்லாம் வந்திருக்காங்க....”
“அச்சோ இல்லை சார்... இது மொத்தமும் எங்க குடும்பம்... இது என்னோட மாமனார்...”, என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த ஆரம்பித்தார் அனந்து...
அதற்குள் மாடியில் தங்கள் வீட்டிற்கு ஓடிய மைத்தி தன் மாமா பசங்கள் வாங்கித் தந்த பந்தை எடுத்து வந்து துளசியிடம் காட்டிக் கொண்டிருந்தாள்... அவள் ஏற்கனவே அதில் தன்