சிரிக்கவும் இலக்கியா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
நேராக வந்தவள் "பாக்கியம் காபி ரெடியா?" என அவர்கள் இருவரும் சிரித்து கொண்டிருந்ததை கண்டு எழுந்த வெறுப்புடன் கேட்க, "இதோ ரெண்டு நிமிஷத்துல ஆயிடும் சின்ன பாப்பா" என்றார் பாக்கியம்.
"என்னது சின்ன பாப்பாவா? நீ இந்த வீட்ல வேலை செய்ற சமையல் காரி, என்னை போயி சின்ன பாப்பானு கூப்டற? இது தான் கடைசி. இனிமேல் என்னை மேடம்னு கூப்டு. சும்மா வெட்டி பேச்சுபேசி நேரத்தை வீணாக்காம சீக்கிரம் காபி கொண்டு வா" என கத்த, அதை கேட்ட பாக்கியத்தின் கண்கள் கலங்கியது.
அவரின் முகத்தை பார்த்த தமிழ்செல்வி, "என்ன இலக்கியா அவங்களுக்கு நம்ம அம்மா வயசு. அவங்களை போயி நீ வா போனு மரியாதை இல்லாமல் பேசற. சாரி கேளு " எனவும் "என்னது நான் சாரி கேட்கணுமா?" என இலக்கியா கத்த "ஆமாம் நீ சாரி கேக்கணும்" என்று பின்னால் இருந்து கேட்ட குரலில் எல்லோரும் பார்க்க, அங்கே நின்று கொண்டிருந்த விசாலம் பாட்டி "சாரி கேக்கணும் இலக்கியா, பாக்கியம் இந்த வீட்ல பல வருஷமா இருக்கறாங்க. அவங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தான். நாங்களே இப்படி பேசுனது இல்லை. நீ பேசுனது ரொம்ப தப்பு" விசாலம் சொல்ல, "ஐயோ சின்ன பொண்ணுங்கம்மா. பரவால்லை. இந்தாங்க காபி" என இலக்கியாவிடம் நீட்ட, அவள் அதை வாங்காமல் அறையை நோக்கி விறுவிறுவென சென்றாள்.
"அவ சார்புல நான் மன்னிப்பு கேக்கறேன்" என தமிழ்செல்வி பாக்கியத்திடம் சொல்ல, "ஐயோ என்னம்மா நீ, என்கிட்டே போயி...அதெல்லாம் நான் மனசுல வெச்சுக்கல. என்ன பாப்பா காபி குடிக்காம போயிடுச்சு. வந்த முதல் நாளே இப்படி மனசு சங்கடப்படுதே பாப்பாக்குனு தான் வருத்தமா இருக்கு" என பாக்கியம் சொல்ல, "அவளுக்கு காபி குடிக்காம இருக்க முடியாது. திரும்ப வருவா. கவலைப்படாதீங்க" என புன்னகைத்தாள் தமிழ்.
"ஒரே வீட்ல இருந்து வந்த ரெண்டு பேரும் ரெண்டு விதமா இருக்கீங்க பாப்பா" என்றவரிடம் புன்னகையுடன் தனக்கான காபியை எடுத்து திரும்பியவள் பார்த்த விசாலம் "செல்வி, ராம் எழுந்துட்டானா? எழுந்ததும் அவனுக்கு சூடா காபி வேணும். மேல கொண்டு போயிடுமா?" என்று விட்டு செல்ல, "அந்த கடுவன் பூனையிடம் மறுபடியும் போக வேண்டுமா" என்ற யோசனையுடன் வேறு வழியில்லாமல் காபியுடன் மேலே சென்றாள் தமிழ்.
அவள் உள்ளே நுழையும் போது ராம் படுக்கையில் இல்லை. "நல்லதா போச்சுடா சாமி" என மனதில் நினைத்தவள் அங்கிருந்த டேபிளின் மேல் காபியை வைத்து விட்டு கீழே ஓடி போனாள்.