என்னை ஒரு அட்மினிஸ்ட்ரடர் ப்ளஸ் சூப்பர்வைசரா வர முடியுமான்னு கேட்டாரு. எனக்கும் அது புடிச்ச ஒர்க். அதுவும் இல்லாம அங்க அது ஓரளவுக்கு பெரிய போஸ்ட் அப்டிங்கறதால வெளில யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" தமிழ்செல்வி சொல்லிவிட்டு விசாலத்தின் முகத்தை பார்த்தாள்.
"சரி செல்வி. நான் நாளைக்கு ராம்கிட்ட பேசறேன். நீ இப்போ மேல போ" அவளை அனுப்பிவிட்டு யோசனையுடன் அமர்ந்தார் விசாலம். இருவருக்குள்ளும் எதுவோ சரி இல்லை என தோன்றியது அவருக்கு.
அவள் அறைக்குள் நுழையும் போது ராம் லேப்டாப்பும் கையுமாக இருந்தான். உள்ளே வந்தவள் நேற்றைய இரவை போலவே இப்போதும் போய் அங்கிருந்த சோபாவில் படுத்தாள். அவளுக்கு பாட்டி நாளை ராமிடம் பேசுவதை எண்ணி கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. நிச்சயம் பாட்டி சொல்வதை போல இங்கிருக்கும் பணத்தை வாங்க அவளால் முடியாது. ஒரு வேளை இலக்கியா பரத்தை போல ராமும் இவளும் அன்யோன்யமான தம்பதியராக இருந்திருந்தால் கணவனின் பணத்தை எடுத்து செலவு செய்திருப்பாளாயிருக்கும். ஆனால் இங்கு நிலைமை வேறு அல்லவா? ஆனால் அவளுக்கு இப்போது வேறு வழி இருக்கவில்லை. அசோக் அவளிடம் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசி இருந்தான். பாட்டி ராமிடம் பேசியா பின்பு தான் மீண்டும் அசோக்கிடம் பேச வேண்டும் என்று எண்ணியவள் யோசனையுடன் உறங்கி போனாள்.
லேப்டாப்பில் வேலையை முடித்துவிட்டு அதை அணைத்தவன் சோபாவில் உறங்கி கொண்டிருந்த தமிழ்செல்வியை பார்த்தான். எழுந்து அவள் அருகே சென்றான்.
சில நிமிடங்கள் அவள் முகத்தை பார்த்தவன் கண்களில் அவளின் சுருங்கி இருந்த புருவங்கள் பட்டது.
"தூக்கத்துல கூட ஏதோ பிளான் பண்ரா பாரு" என்று எண்ணியவன் மெத்தையில் சென்று அமர்ந்தான். அவனையே அறியாமல் அவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். செல்பேசியில் வந்த ஏதோ ஒரு மெசேஜ் பீப் ஒளி எழுப்ப, திடுக்கிட்டு அமர்ந்தவன் நினைத்தான்.
"எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த கூடாதுனு சொன்னாளே...இவள் என்ன எலியா? இவ...இவ...எலி இல்லை மோஹினி பிசாசு...கொஞ்சம் ஏமாந்தா ஆளையே காணாமற் ஆக்கிடுவா" என்றவன் தலையை சிலுப்பி கொண்டு கண்களை இறுக மூடி கொண்டு படுத்தான்.
காலையில் அனைவரும் வழக்கம் போல டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, விசாலம் பேச்சை துவங்கினார்.