சங்கடமாயிருக்கு, அவங்க கேட்கறாங்க,
'நாலு பொண்ணுங்க வந்திருக்காங்களே, பெற்ற தாய்க்கு பிறந்தநாளன்னைக்கு ஒரு புதுப் புடவை வாங்கித் தரணும்னு ஒருத்தருக்குக் கூடவா தோணலேன்னு அதிசயப்படறாங்க, அதிலேயும் நாலுபேரும் வசதியா வாழறவங்க!"
நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து தலை குனிந்தனர். அவர்களுக்கு ஏன் அது தோன்றவேயில்லை? தப்புத்தான்!
" ஏம்மா பொண்ணுங்களா! இந்த பத்து வருஷத்திலே ஒருநாள்கூடவா, பெத்தவங்க நல்லா இருக்காங்களான்னு வந்து பார்க்கத் தோணலே?
இன்னிக்கி எப்படி திடீர்னு ஞானோதயம் வந்தது? ஏதோ மர்மமாயிருக்கே?"
தர்மன் - பிரபா இருவருக்கும் கோபம் வந்து, எழுந்துகொண்டனர்.
" இங்கிதம் தெரியாத, பொறாமை பிடிச்சவங்க நடுவிலே, நல்லது நடந்தா, இப்படித்தான் சேற்றை வாரிப் பூசுவாங்க! வாங்க, நம்ம ரூமுக்குப் போகலாம்!"
ஷகீலா பெற்றோரை சமாதானப்படுத்தி உட்காரவைத்து விட்டு, கூடியிருந்தவர்களிடம் பேசினாள்:
" நீங்க பேசினது ஒண்ணுகூட தப்பேயில்லை! நாங்க நாலுபேரும் சந்தேகமேயில்லாம குற்றவாளிகள்தான்! செய்தது, மகாபாபந்தான்!
எங்களுக்கு புத்தி வந்திடிச்சி! நீங்க எல்லோரும் சந்தோஷப்படறா மாதிரி, ஒரு நல்ல விஷயம் சொல்றேன்!
இன்று மாலை பிரசங்கம் முடிந்தவுடன், எங்க அப்பா - அம்மாவை நாங்க, எங்க வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்!
ஒருநாள், ரெண்டுநாள்,ஒரு வாரத்துக்கில்லே, நிரந்தரமா எங்களோட அவங்களை வைத்துக்கொள்ளப் போகிறோம். சந்தோஷமா?"
கூடியிருந்தவங்க எழுந்து நின்று, கைதட்டி, தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
" இன்னொரு விஷயம்! நாங்க இன்னிக்கி எங்க அப்பா - அம்மாவை எங்களோட கூட்டிக்கொண்டு போகிறமாதிரி, உங்களையும் உங்க பிள்ளைங்க சீக்கிரமே வந்து அழைத்துப் போக, கடவுளை வேண்டிக்கிறோம்!"
கூடியிருந்தோர் தலை குனிந்து கண்களை துடைத்துக் கொண்டனர்.
மாலை வந்தது. குறித்த நேரத்தில், சுவாமிகளும் வந்து பிரசங்கம் செய்தார்.
"நீங்க எல்லோரும் வயசானவங்க! நிறைய அனுபவப்பட்டவங்க! நல்லது, கெட்டது தெரிஞ்சவங்க! இனிமே நான் சொல்றதைக் கேட்டு நீங்க தெரிஞ்சிக்க ஒண்ணுமில்லே!