ஆனா, முதுமையினாலே உங்களுக்கு மறதி வந்திருக்கும். அதனாலே, சில விஷயங்களை ஞாபகப்படுத்தலாம்னு நினைக்கிறேன்!
மனிதனாகப் பிறந்த எல்லோருமே வளர்ந்து, படித்து, மணந்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து, ஆளாக்கி, களைத்து, இளைத்து, நோயுற்று, படுக்கையில் விழுந்து, கண்களை மூடுகிறோம்!
இது தவிர்க்கமுடியாத ஒன்று!
ஆனால், இதிலே சிலபேர் சந்தோஷமா இருக்கோம், பலபேர் வருத்தப்படறோம்! கோபம் கொள்கிறோம், ஆத்திரப்படுகிறோம்!
ஏன்? நாம் நினைக்கிறபடி நடந்தால், நமக்கு சந்தோஷம்! மாறுதலாக நடந்தால் வருத்தம்!
அந்த மாறுதல் கொஞ்சமா இருந்தா, கொஞ்சமா வருத்தம்! அதிகமா இருந்தால், அதிகமா வருத்தம்!
வாழ்க்கையின் வெற்றி, தோல்வியை கணிப்பது எது? நமது சந்தோஷம், துயரம்!
இப்ப, இந்த இல்லத்திலே இருக்கிறவங்களிலே, பெரும்பாலானவங்க, துயரப்படறவங்க, 'ஐயோ! நாம பெற்ற பிள்ளைங்களோட, பேரக்குழந்தைகளோட வாழமுடியாம, தனியா இருக்கோமேங்கற வருத்தம்!
ஒருசில பேர், நேற்றுவரை, பல வருஷமா, சோகமா இருந்திருப்பாங்க, ஆனால் இன்று ஒருநாள் மட்டும் சந்தோஷமாயிருப்பாங்க, இன்னும் குறைந்த எண்ணிக்கையிலே, இன்றிலிருந்து வரும் காலம் முழுவதும் சந்தோஷமா இருப்பாங்க!
இப்ப, இந்த சந்தோஷமா இருக்கிறவங்களுடைய காரணத்தை கேட்டால், ஒருசாரார் இந்த இல்லத்தில் தனிமையாக வாழ்ந்த நிலை முடிந்து மறுபடியும் குடும்பத்தோட இணைவதாக இருக்கும்.
மற்றொரு சாரார், 'நம்மாலே மற்றவர்களுக்கோ, மற்றவர்களாலே நமக்கோ எந்த உபத்திரவமும் இல்லாம வாழறோங்கற மகிழ்ச்சி!
காரணங்கள் ஆயிரம் வரும், போகும், ஏன்னா, காரணத்தின் காரணம் மாறுவதனாலே!
புரியலையா? உதாரணமா, இப்ப இங்க ஒருத்தர் சந்தோஷமா இருக்க காரணம், அவர் குடும்பத்துடன் சேருவதுன்னு சொன்னா, அந்தக் காரணம் மாறலாம் இல்லையா? இந்த நபர் விஷயத்திலே, குடும்பத்தை சேர்ந்த ஒருத்தருக்கு கொரோனா வியாதி வந்திருக்கிறதா சந்தேகம் வந்து, அந்த வீடே தனிமைப்படுத்தப் படுகிறபோது, இந்த நபர் குடும்பத்துடன் இணைவது மாறி, தள்ளிப்போகிறது!