தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 04 - ஜெபமலர்
ஒரு மாதம் கடந்து இருந்தது. ராகவ்விற்கு குழலியை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ரோபோட் பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு வந்தது.
அவள் யாரிடமும் நெருங்கி பழகவில்லை. எதை பார்த்தாலும் உடனே கற்றுக் கொள்கிறாள். எல்லாரிடமும் இருந்து தனித்தே இருக்கிறாள்.
அவள் எதை குறித்தும் கவலைப் படுவது போலும் இல்லை. ஏதோ தனி உலகில் சஞ்சரிப்பவளை போலவே இருந்தாள்.
ராகவ் குழலி இருவரும் இந்த ஒரு மாத காலத்தில் பேசிக் கொள்ளவும் இல்லை. சண்டையிட்டு கொள்ளவும் இல்லை. ஆனால் எதிரெதிரே பார்க்கும் போது முறைத்துக் கொண்டனர்.
அவளிடம் யாராவது தகாதவிதமாய் நடக்க முயற்சி செய்தால் இப்போது எல்லாம் அவள் அடிப்பது இல்லை. அவர்களை விட்டு ஒதுங்கி போகிறாள். ஆனால் டையரை பஞ்சர் செய்வது, யாருக்கும் தெரியாமல் கல்லால் அடிப்பது, எதேச்சையாக மிதிப்பது போல ஷூகாலால் மிதிப்பது, பேனாவின் கூர்முனை கொண்டு குத்துவது போன்ற அதிரடிகளை செய்து கொண்டு தான் இருந்தாள்.
உடன் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, பள்ளியில் வேலை செய்யும் உதவியாளர்களாக இருந்தாலும் சரி.. வரும் வழியில் வாலாட்டுபவர்களாக இருந்தாலும் சரி... அனைவருக்கும் பாடம் கற்பிக்க தவறவில்லை.
குழலியின் துணிவும் நேர் கொண்ட பார்வையும் அவள் மீது ஒரு அன்பை ஏற்படுத்தியது ராகவ்விற்கு. அவளுக்கு ஏதாவது மனநோய் இருக்குமோ என்று கூட அச்சம் ஏற்பட்டது ராகவ்விற்கு.
அவன் அவளைப்பற்றி யோசித்து கொண்டு ஹெமிஸ்டிரி வகுப்பில் இருக்கும் பொழுது தான் குழலியும் லேப்பிற்குள் நுழைந்தாள்.
ராகவ் எழுதிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் உள்ளே சென்ற குழலி திரும்பி வருவதற்காக காத்து இருந்தது.
அங்கு ஆசிரியர் இல்லாததால் லேப் அசிஸ்டென்ட் இடம், தான் கொண்டுவந்த நோட்டைக் கொடுக்க அவர் அதை வாங்கி வைத்துவிட்டார்.
அந்த இடத்தையே சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே குழலி தற்சமயமாக அருகிலிருந்த வகுப்பறைக்குள் பார்க்க அங்கிருந்து ராகவ் தன்னை பார்ப்பதை கண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவள் சிரித்து இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறான். பதிலுக்கு அவனும் சிரித்து வைக்க அங்கிருந்து சென்றுவிட்டாள் குழலி.