தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 04 - ராசு
மகள் திருமணத்தை மறுத்துக்கொண்டிருக்க அவளை கண்டித்த வளர்மதி அந்த நேரத்தில் மாப்பிள்ளையாக அவன் தேர்ந்தெடுத்திருந்த மாதவன் வருவானென்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் வாசல் பக்கம் பார்த்து நின்றவாறு பேசிக்கொண்டிருந்தாள். அதனால் மாதவன் வருவதை அவள் உடனே தெரிந்துகொண்டாள். ஆனால் அவள் எதிரே நின்றிருந்த மகாலட்சுமி வாசலில் என்ன நடக்கும் என்பதை அறிய மாட்டாள். அவள் தொடர்ந்து பேசுவதை நிறுத்துவதற்காக பேச்சை திசை திருப்பினாள் வளர்மதி.
“வாங்க மாப்பிள்ளை.” என்று அவள் அழைத்ததுமே மகாலட்சுமி சுதாரித்துவிட்டாள்.
என்னதான் தான் சமாளித்துவிட்டதாக வளர்மதி நினைத்தாலும் மனதில் திக்திக்கென்றுதான் இருந்த்து.
மகள் காலம் முழுவதும் அவனுடன் வாழப்போகிறாள். அவளுடைய மறுப்பை அவன் கேட்டிருந்தான் என்றால்?
அவனுடைய ஜாதகம்தான் மகாலட்சுமியின் ஜாதகத்திற்குப் பொருந்தி வருகிறது. ஒருவேளை அவன் கோபப்பட்டு இந்தத் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டான் என்றால்? பெரியவர்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியுமா?
பேத்தியின் மேல் உயிரையே வைத்திருப்பவர்கள். அவளுக்கு ஒரு நல்லதை செய்து கண்குளிர பார்த்துவிட வேண்டும் என்று காத்திருப்பவர்கள்.
இந்தத் திருமணம் நின்றால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களால் மட்டுமா? குடும்பத்தில் யாராலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாதுதான்.
ஊரறிய இவன்தான் மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ளப்போகிற மாப்பிள்ளை என்று அறிவித்துவிட்டு இப்போது மாற்றினால் என்ன சொல்வார்கள்?
மாப்பிள்ளை வசதியில்லாதவன் என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்கள். முன்பு யோசிக்காமல் சம்மதம் கூறிவிட்டு இப்போது எதையோ கூறி சமாளிக்கிறார்கள் என்றுதானே பேச்சு வரும்.
அதன் பிறகு மகாலட்சுமியை மணக்க யார் முன்வருவார்கள்? அப்படியே வந்தாலும் அவளை மனதார ஏற்றுக்கொண்டு வருவார்களா? இல்லை அவளால் வரக்கூடிய வசதியை நினைத்து வருவார்களா? ஆனால் மாதவன் மாமனார் வீட்டில் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. மாதவன் அவர்களிடம் இந்தத் திருமணத்திற்காக முன்வைத்த நிபந்தனையே மகாலட்சுமி தன்னுடைய வசதிக்கேற்ற வாழ்க்கையில் வாழ வேண்டும். அவர்கள் தரும் எதையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான்.
அவர்களும் வேறு வழியில்லாமல் அவன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன் இந்த மாப்பிள்ளையின் ஜாதகம்தான் அவளுடைய ஜாதகத்துடன் பொருந்தி வருகிறது.