பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
எப்படி, எப்போது அவனை சந்திப்பது? யாருடன் செல்வது? என்று அவள் மனதில் ஓடியது. தோழி சுகன்யாவை அழைத்துச் செல்லலாம் என்றால் அவள் கண்டிப்பாக தன் தாயிடம் ஒப்பித்துவிடுவாள் என்று தெரியும். அவள் இந்தக் குடும்பத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறிக்கொண்டிருப்பவள். அதனால் அவள் தன் விசுவாசத்தைக் காட்டத்தான் நினைப்பாள். ஒருவேளை அவளே அந்த மாதவனுக்காக தன்னிடம் பரிந்து பேசி இந்தத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைக்க முயற்சி செய்தாலும் செய்யலாம். அதனால் அவளை அழைத்துச் செல்லாமல் தானே தனியே சென்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தாள்.
எப்படியும் அவள் வீட்டில் அடைந்து கிடப்பதில்லை. அவளுக்கென்று குடும்பத்தார் கொடுத்திருக்கும் உணவு விடுதிக்கு அவள் அவ்வப்போது சென்றதுண்டு. இப்போது படிப்பை முடித்து வந்த உடன் தந்தை அவளிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார். உணவு விடுதிக்குச் செல்லும்போது அங்கிருந்து அவனை சென்று பார்த்துவிட வேண்டியதுதான். அவனை எங்கே பார்க்கலாம்? எப்போது பார்க்கலாம்? என்ற யோசனை ஓடியது.
சுகன்யா வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். மகாலட்சுமிக்கு கொடுத்திருக்கும் உணவு விடுதியில்தான் அவளுக்கு வேலை. அங்கேயே தங்கும் விடுதியும் இருக்கிறது.
“என்னம்மா? ஏன் தயக்கத்துடன் நிற்கிறே?”
“நீ வந்ததில் இருந்தே பேசனும்னு நினைக்கிறேன்.” என்றாள் மரகதம்.
“அப்ப பேச வேண்டியதுதானே?”
“அக்காதான் தடுத்துக்கிட்டே இருக்கா.” என்றாள் சோர்வாய்.
“அப்படி என்ன விசயம்?”
“அவளுக்கு ஒரு வரன் வந்திருக்கு. அவள் பிடிகொடுத்துப் பேச மாட்டேங்கிறா.”
“என்ன பிரச்சினை? அவளுக்குப் பிடிக்கலையோ என்னவோ?”
“அதெல்லாம் இல்லை. கல்யாணப் பேச்செடுத்தாலே மறுக்கிறாள்.”
“அக்கா.”
“சொல்லு. நான் அம்மா சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். இந்த அம்மாவுக்கு வேறு வேலையில்லை. நீ வேலைக்கு கிளம்பு. எனக்கும் நேரமாயிடுச்சு.” என்றாள் செல்வி.
“அக்கா. இப்படி பேசாமல் உன் மனசில் உள்ளதை சொல்லிட்டுப்போ.”
“என் மனசில் என்ன இருக்குடி? நீங்கதான் இருக்கீங்க.”
“அக்கா. போதும்க்கா. எங்களுக்காக நீ உழைச்சது. இப்பதான் எனக்கு நல்ல வேலை கிடைச்சுடுச்சே. இனி நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”
“அதைத்தான் நானும் சொன்னேன். அவ கேட்க மாட்டேங்கிறா.”