வேறு யாருக்கு கொடுத்தாலும் மகாலட்சுமியினுடையது தோஷ ஜாதகம் என்பதால் பொருத்தமில்லாமல் வேறு யாருக்கும் கொடுத்து அதனால் பேத்தியின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பெரியவர்கள் பயப்படுகின்றனர்.
மாதவன் ஏழை என்றாலும் தன்னுடைய முயற்சியால் படித்து தனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கிக்கொண்டவன். அத்துடன் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத குணமுள்ளவன்.
இப்போதும் அவன் அவர்களைத் தேடி வரவில்லை.
இவர்களாக தேடிச் சென்றபோதும் மறுப்பைத் தெரிவித்தவன்.
“உங்க பொண்ணு வசதியா வாழ்ந்த பொண்ணு. என்கிட்ட அத்தனை வசதி கிடையாது. எனக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது. நான் எனக்கேற்ற இடத்தில் பெண்ணெடுப்பதுதான் சரியானது. நான் இன்னும் வாழ்க்கையில் செட்டிலாகவில்லை. நான் இப்போது என்னுடைய திருமணத்தைப் பற்றிக்கூட நினைச்சுப்பார்க்கலை.” என்று ஒரேயடியாக முடித்துக்கொள்ளத்தான் பார்த்தான்.
அவன் அவனுடைய தாய் மாமனின் பேச்சை மட்டும்தான் கேட்பான் என்று ராஜசேகரிடம் பேசி அவனை இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் மகள் இப்படி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டால் மாப்பிள்ளை இவள் நமக்கு சரிப்பட்டு வரமாட்டாள் என்று சொன்னது உண்மையாகிவிடுமே.
கோபத்தில் இவளை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றுவிட்டால்?
மாதவனை வரவேற்ற கையோடு மகளை முறைத்துப் பார்த்தாள் வளர்மதி.
மகாலட்சுமியும் அவன் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை.
அவன் முகத்தை வைத்து அவன் தன் பேச்சைக் கேட்டிருப்பானா? இல்லையா? என்று அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை.
பாறை போல் இறுகியிருக்கும் அவன் முகத்தைக் காணக் காண அவளுக்குப் பயம் வந்தது.
சிரிப்பையே அறிந்திராதவன். இவனுடனா தன்னுடைய வாழ்க்கையை வீட்டார் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவன் எப்போதும் என்னை சிறு குழந்தையைப் போல் அல்லவா பாவிக்கிறான். இல்லை என்றால் திமிர் பிடித்தவள் என்கிறான்.
அவனுக்குப் பின்னேயே ராமச்சந்திரன் ராஜசேகருடன் வருவது தெரிந்தது. வெளியில் சென்றவர் மருமகனும், அவனுடைய தாய் மாமனும் வருவதைக் கண்டு போவதை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நின்றிருந்துவிட்டு தாமதமாக வருகிறார்கள்.
நல்லவேளை. அவர் தாமதமாக வருகிறார். அவரும் மாதவனுடனே வந்திருந்தால் மகள் அசட்டுத்தனமாக பேசுவதை கேட்டுவிட்டு இந்த வரனைப் பற்றி யோசித்திருப்பார். அத்துடன் வீட்டில் உள்ள வேறு யாரும் மகளின் அசட்டுத்தனத்தை அறியவில்லை. இனி அவள் இப்படி உளராமல்