அவளுடைய அன்னை சும்மா கண்ணைக் காட்டிவிட்டாலே போதும். அவள் தன்னறைக்கு ஓடிவிடுவாள். ஆனால் வளர்மதியோ கண்ணும் கருத்துமாய் ராஜசேகரும், தன் கணவனும் பேசிக்கொண்டிருப்பதை செவிமடுத்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு மாதவனை திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. இத்தனை பேருக்கு முன்னாலேயே கண்ணால் மிரட்டுகிறான். இவனுடன்தான் என்னுடைய வாழ்க்கை அமையப்போகிறதா? இதில் எந்த மாற்றமும் வர வாய்ப்பில்லையா?
“நான் தாத்தாவைப் பார்க்கதான் வந்தேன் மாமா. மாமாவும் உங்ககிட்ட பேசனும்னு சொன்னதால் இரண்டு பேரும் சேர்ந்து வந்தோம். நான் தாத்தவை பார்த்துட்டு வர்றேன்.” என்றவாறு ஒருவழியாக எழுந்து சென்றான் மாதவன். அதன் பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.
மாதவன் ஒரு பிசியோதெரபிஸ்ட். கீழே விழுந்து அடிபட்ட கந்தசாமிக்கு இப்போது அவன்தாதன் பிசியோதெரபி கொடுக்கிறான்.
இவன் எல்லாம் எப்படி சிகிச்சை கொடுக்கிறான் என்று மகாலட்சுமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் வைத்தியரிடம் செல்லும்போது அவர் நம்மிடம் அனுசரணையாகப் பேசினாலே பாதி வியாதி குறைந்தது போன்று நாம் உணர்வோம். அவருடைய மருந்தில் பாதி வியாதியும், அவரது பேச்சினாலேயே பாதி வியாதியும் குறைந்துபோகும்.
இவன் இப்படி கண்களாலேயே மிரட்டினால் எப்படி வியாதி குறையும்?
“என்னடி மரம் மாதிரி நின்னுக்கிட்டிருக்கே? நான் எத்தனை நேரம் கூப்பிடுறேன்?”
வளர்மதியின் குரல் காதருகில் கிசுகிசுக்கவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
தாயின் கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்று அவள் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டாள் மகாலட்சுமி.
தங்கள் அறைக்குள் மகளைப் பிடித்து இழுத்து வந்த வளர்மதி இருவரும் உள்ளே வந்ததும் முதல் வேலையாக கதவைத் தாழிட்டாள்.
அதன் பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.
“என்னடி நினைச்சுக்கிட்டிருக்கே உன் மனசில? நான் உன்னை ஊருக்கு அனுப்பும்போதே உன்கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன்?” பல்லைக் கடித்தாள்.
“அம்மா நான் இப்பவும் சொல்றேன். ஒரு கழுதையா இருந்தாலும் சொல்லுங்க, நான் கழுத்தை நீட்டறேன்.”
“திரும்பத்திரும்ப இப்படியே பேசிக்கிட்டிருந்தா பல்லைக் கழட்டிடுவேன்.”
“அப்புறம் உங்களுக்குத்தான் கஷ்டம். பல்லில்லாத பெண் எனக்கு வேண்டாம்னு உங்க அருமை மாப்பிள்ளை சொல்லிட்டா என்ன பண்ணுவே?”
தாயை மடக்கும் எண்ணத்துடன் கேட்டு காதை தாயின் கைகளில் மாட்டிவைத்தாள்.