அவனை எப்போது எப்படி சந்தித்து திருமணத்தை நிறுத்துவது பற்றி எப்படி பேசுவது என்ற ஒத்திகை ஓடிக்கொண்டேயிருந்தது.
அவனை அவன் வீட்டில் வைத்து சந்திப்பதை விட பணியிடத்தில் வைத்து சந்திப்பதுதான் நல்லது என்று தோன்றியது.
அதன் படி அவன் இருக்கும் நேரத்தில் அவள் அவன் கிளினிக்கிற்கு சென்று சேர்ந்தாள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவனை சிகிச்சைக்காக பார்க்க வந்ததாகவே கூறினாள்.
வைத்தியம் பார்ப்பவர்கள் எல்லாம் பார்த்துச் செல்லட்டும் என்று கையோடு கொண்டு வந்த கதைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
“மேடம். எல்லாரும் பார்த்தாச்சு. இனி உங்க முறைதான். நீங்க உள்ளே போகலாம்.” வரவேற்பு பெண் கூறவும் உள்ளே சென்றாள்.
அவளைக் கண்ட ஆச்சர்யப் பார்வை கூட அவனிடம் இல்லை.
‘இவனை எல்லாம் என்ன செய்யலாம்?’ நொந்து கொண்டாள்.
“என்ன பிரச்சினை?” என்றவன் தன்னருகே இருந்த நாற்காலியில் அமரச் சொன்னான்.
அது நோயாளிகளை பரிசோதிக்க என்று அவனருகே போடப்பட்ட நாற்காலி. அவள் அறையை சுற்றிப் பார்த்தாள். ஒரு ஸ்டூல் தள்ளிப் போடப்பட்டிருந்தது. அதே மாதிரி ஒரு நாற்காலியும், நோயாளியைப் படுக்க வைத்து சோதிக்குமளவிற்கு உயரமான பலகையும் இருந்தன.
அந்த நாற்காலியில் போய் அமர்ந்தாள் அவனிடம் சத்தம் போட்டுத்தான் பேச வேண்டும். அத்துடன் தான் வந்த வேலை நடக்க வேண்டுமானால் அவன் சொன்னதைக் கேட்டு நல்லபிள்ளையாக நடக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.
அவன் கைகாட்டிய நாற்காலியில் அமர்ந்தாள். அவனருகில் அமர்ந்திருப்பது மூச்சு முட்டுவது போலிருந்தது.
“என்ன பிரச்சினை?” அவள் முகத்தில் அவன் பார்வை பதிந்தது.
‘நீதான்டா பிரச்சினை? இப்பக் கூட உனக்கு சிரிப்பு வரலையாடா? நீ என்ன ஜடமா?’
“எனக்கு வேலை இல்லாமல் நான் இங்கே உட்கார்ந்தில்லை. என்ன பிரச்சினைன்னு கேட்டேன்.” என்றான் அழுத்தமான குரலில்.
அவள் உதடு காய்ந்துவிட்டது. தொண்டையை விட்டு குரல் வெளியில் வரவில்லை.
தண்ணீர் தம்ளரை எடுத்து அவளருகில் வைத்தான். அவசரமாக எடுத்துப் பருகினாள். முழுவதையும் குடித்துவிட்டுத்தான் தம்ளரை வைத்தாள்.
நீயே சொல்லு என்பதுபோல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
‘ராட்சசன்.’ என்று மனதிற்குள் திட்டினாள்.
வேறு வழியில்லை. வந்த விசயத்தைக் கூறிவிட வேண்டியதுதான்.