“ஷ். அம்மா. காது வலிக்குது.” கெஞ்சினாள்.
“உனக்கு செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சிருக்காங்க. ரொம்ப துளிர் விட்டுப்போச்சு.”
இன்னும் கோபம் மாறாமல் மகளைக் கடிந்தாள்.
“நல்லவேளை மாப்பிள்ளை காதில் விழலை.”
அவளுக்கென்னவோ அவன் காதுகளில் விழுந்திருக்கும் என்றுதான் தோன்றியது. அவன்தான் கல்லுளிமங்கனாச்சே. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டான். தன்னுடைய திருமணம் திடீரென்று முடிவானதல்ல என்பது அவளுக்குத் தெரியும். அப்படியும் அவன் சென்னைக்கு வந்தபோது அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண் என்ற ஆர்வம் கூடவா அவனுக்கு இருக்காது? அவனோடு எப்படி காலம் பூரா வாழ முடியும்?
ஆனால் என்ன சொல்லி திருமணத்தை நிறுத்துவது? அம்மாவே இத்தனை கோபத்தைக் காட்டும்போது மற்றவர்கள்? தாத்தா பாட்டி இதை ஒப்புக்கொள்வார்களா?
ஆனால் அவனோடான திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமாக இருக்காது என்று அவளுக்குத் தோன்றியது.
“என்னடி முழிச்சுக்கிட்டிருக்கே?”
‘ஐய்யய்யோ. அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியலையே.’ விழித்தாள்.
“மாப்பிள்ளையோட மாமா காதில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்? இனி இது மாதிரி லூசுத்தனமா உளறிக்கொட்டாதே.”
‘அந்த சித்தப்பா காதில் விழுந்திருந்தால் அவரே கல்யாணத்தை நிறுத்தியிருப்பாரோ?’
“இதப்பாரு. உனக்குப் பொருத்தமான ஜாதகத்தைத் தேடித் தேடி அலைஞ்சிக்கிட்டிருந்தப்பதான் மாப்பிள்ளையோட ஜாதகம் பற்றி தெரிய வந்துச்சு. அவர் ஜாதகம்தான் உன்னோட ஜாதகத்திற்கு அத்தனை பொருந்தி வருது. நம்ம ஜோசியரும் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்லாருப்பாங்கன்னு சொன்னாரு. மாப்பிள்ளை உடனே ஒத்துக்கிட்டார்னு நினைக்கறியா? உங்க வசதிக்கேற்ற மாப்பிள்ளையை பாருங்க. நமக்கு ஒத்துவராதுன்னு சொல்லிட்டார். அவர் அப்படி சொன்னதுமே நம்ம வீட்டில் எல்லோருக்குமே அவரைப் பிடிச்சுப் போச்சு. இதற்கு முன்னாடி வந்த வரன் எல்லாம் உன் மூலமா என்ன வரும்னு எதிர்பார்த்துதான் வந்தாங்க. நல்லவேளை ஜாதகம் ஒத்து வரலை. அதனால் நாங்க நிம்மதியா இருந்தோம். இப்ப மாப்பிள்ளை அவரோட மாமா சொன்னதால்தான் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார். அத்தோட நீ கல்யாணம் ஆகி வேற ஊருக்குப் போயிட்டால் உன்னைப் பிரிந்திருக்கனுமேன்னு நாங்க எல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தோம். இப்ப நீயும் இங்கேயேதான் இருக்கப் போறே. எல்லாத்தையும்