யோசித்துதான் நாங்க இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். உன்னோட முட்டாள்தனத்தினால் எதையாவது செய்து வச்சே அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன். இப்பப் போ. உன்னோட அறைக்குப் போய் நல்லா யோசி.”
அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல் தங்கள் அறையில் இருந்து அவளை போகச் சொல்லிவிட்டாள்.
வெளியில் வந்த மகாலட்சுமி அதிர்ந்துபோனாள்.
அறை வாசலில் மாதவன் நின்றிருந்தான். அவன் பார்வையும் அறை வாசலைப் பார்த்த வண்ணம் இருந்தது.
‘தாத்தாவைப் பார்த்துவிட்டு வந்துவிட்டான் போலும்.’
‘அடி ஆத்தி. இவன் எப்போ வந்தான்னு தெரியலையே. எல்லாத்தையும் கேட்டிருப்பானா?’
‘அப்படி கேட்டுவிட்டால் அம்மா என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்களே.’
அவன் பார்வையைக் கண்டதும் அவள் கை தானாக தன் தலைக்குச் சென்றது.
‘பாவி. இப்படி என்னை நிம்மதியில்லாமல் பண்ணிவிட்டானே?’
‘நான் தலையில் கை வைக்கிறதைப் பார்த்தால் அவனுக்கு சிரிப்பு வருமோ?’
யோசனையுடனே அவன் முகத்தைப் பார்த்தாள். எந்த உணர்வையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
‘இப்போதும் பாறை மாதிரி முகத்தை வச்சுக்கிட்டிருக்கான். இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் நான் சிரிப்புங்கறதையே மறந்துடுவேன் போலிருக்கே.’
‘அவன் ஏன் என்னையே இப்படி பார்த்துக்கிட்டிருக்கான்? டேய் ஏதாவது பேசித் தொலையேன்டா. ஐய்யய்யோ. நான் இன்னும் தலையில் கை வைத்துக்கிட்டிருக்கேனா? இவனுக்கு ஏதாவது ஞாபகம் வந்திருக்குமா?’
எதுவும் சொல்லாமல் அவன் சென்ற பிறகுதான் அவளுக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது.
தன்னறைக்குச் சென்றவள் கட்டிலில் கவிழ்ந்து படுத்தாள். யோசித்தாள். அவன் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிற்பதே மூச்சு முட்டுவதைப் போலிருக்கிறது. இதில் அவன் உடன் எப்படி வாழ முடியும்?
தன் வீட்டினரிடம் சொல்லி திருமணத்தை நிறுத்த முடியாது என்பது அவளுக்கு நிச்சயமாயிற்று. இனி தன் தாய் தன்னை கண்கொத்தி பாம்பாய் கண்காணிப்பாள் என்பது தெரியும். மகள் ஏதாவது உளறி காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதில் அவள் கவனமாயிருப்பாள் என்பது மகாலட்சுமிக்கு உறுதியாகப் புரிந்தது.
அதனால் மறுப்பு அவன் பக்கத்தில் இருந்துதான் வரவேண்டும். வேறு வழியில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிட வேண்டியதுதான். முடிவெடுத்த