“அக்கா. அம்மாவைப் புரிஞ்சுக்கோ. காலா காலத்தில் எல்லாம் நடக்கனும்.” என்றாள் பெரிய மனுசியாய்.
“என்னடி பேச்சு திசை மாறுது.”
“அப்புறம் என் லைன் கிளியர் ஆகாமல் போச்சுன்னா.” என்றாள் முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு.
“அப்படின்னா நீயே கல்யாணம் பண்ணிக்கோயேன்.” என்றாள் செல்வி விட்டுக்கொடுப்பதுபோல்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அப்பாவுக்குப் பிறகு நீ இந்தக் குடும்பத்தை தாங்கிப் பிடிச்சிருக்கே. இப்ப என்னோட வேலைக்கு நல்ல சம்பளமும் கிடைக்கப்போகுது. அதை வச்சு தம்பி, தங்கைகளை நல்லா படிக்க வச்சிடுவேன். நம்ம மாதிரி குடும்பத்தாருக்கு படிப்புதான் சொத்து. அதன் பிறகு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா? எனக்கு சீக்கிரம் கல்யாண சாப்பாடு சாப்பிடனும்னு ஆசையா இருக்குக்கா. சரின்னு சொல்லுக்கா.” என்று தமக்கையின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சினாள்.
“சரி சரி. வேலைக்கு நேரமாயிடுச்சு. கிளம்பு.”
அவள் இந்த வேலையில் சேர்ந்த பிறகு தமக்கையை அந்த வேலைக்குப் போக வேண்டாம் என்றாள் சுகன்யா. செல்வி அதிகம் படிக்கவில்லை. அதனால் அவள் கூலி வேலை மாதிரிதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குமே அக்காவிற்கு வயதாகிக்கொண்டு போகிறது. அவள் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். அவள் திருமணம் வரைக்கும் வீட்டில் இருக்கட்டும் என்றுதான் வேலையை விட்டு நிற்கச் சொன்னாள் சுகன்யா. ஆனால் உழைத்துப் பிழைக்கும்போது எந்த வேலையும் கீழானது அல்ல என்று வேலைக்குப் போவதை நிறுத்தவில்லை செல்வி.
மகள்களைப் பார்த்து மரகதத்திற்குப் பெருமையாக இருந்தது.
“அப்பா. நான் இன்னிக்கு உங்களோட வர்றேன்ப்பா.” உணவு விடுதிக்குச் செல்லத் தயாராகி வந்த மகாலட்சுமி கூறவும் ராமச்சந்திரன் மகிழ்ந்துபோனார்.
“வாடாம்மா. நானே இன்னிக்கு உன்னை அழைச்சுட்டுப்போறேன்.”
அவளுக்கென்று கார் இருக்கிறது. அவள் சரியாக ஓட்டுகிறாளா? என்று நன்றாக சோதித்தப் பிறகுதான் அவளை தனியே கார் ஓட்ட சம்மதித்தார் அவர்.
அவள் எப்போதும் தன் காரில் செல்வதுதான் வழக்கம்.
ராமச்சந்திரன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். மகாலட்சுமி முன்பக்க இருக்கையில் அமர்ந்தாள்.
மகாலட்சுமி முடிவெடுத்தது போல் தந்தையுடன் காரில் வந்துவிட்டாள். ஆனால் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கேட்டால் தந்தை என்ன எண்ணிக்கொள்வாரோ? என்ற