பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். தான் அடித்துக்கொண்டதெல்லாம் மகள் என்றாவது இப்படி வந்து நிற்கக்கூடாது என்றுதானே?
“வாங்க.” என்று சிரிப்புடன் ராஜசேகரை வரவேற்றாள்.
மகளையும் கண்ணால் அறிவுறுத்தினாள். தாயின் ஜாடையை அறிந்துகொண்ட மகாலட்சுமியும் தன் அசட்டுத்தனத்தை விட்டுவிட்டு வந்தவர்களை வரவேற்றாள்.
“என்னம்மா? நல்லாருக்கியா? எப்ப வந்தே?”
“நல்லாருக்கேன். நேத்துதான் வந்தேன்.” என்றாள். அவரை எப்படி அழைக்க வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“லட்சுமிம்மா. இவரை யாருன்னு நினைச்சேடா? இவர் நம்ம மாப்பிள்ளையோட தாய் மாமா.” என்று அவரை அறிமுகப்படுத்தினார் ராமச்சந்திரன்.
தாயின் முகத்திலும், மாதவனின் முகத்திலும் கண்டனத்தைக் கண்டாள்.
“இப்ப நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி முறைக்கிறாங்க.” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு யோசித்தாள்.
அவள் அவரை எந்த உறவுமுறையும் கூறி அழைக்கவில்லை. அதுதான் தவறு என்பதை உணர்ந்தாள். அவர் யார் என்பது தெரியாது. அதனால் அப்படி பேசினாள்.
“லட்சுமி. போய் காபி கொண்டு வா.”
தாயின் கட்டளைக்குப் பணிந்து உள்ளே சென்றாள் மகாலட்சுமி.
சிறிது நேரத்திலேயே வந்தவள் முதலில் ராஜசேகரிடம் நீட்டினாள்.
“பயப்படாமல் எடுத்துக்குங்க சித்தப்பா. நான் நல்லாவே காபி போடுவேன்.” என்றாள் சிரித்துக்கொண்டே.
அவரும் அவளைப் பார்த்து சிரித்தார்.
“நீ எப்படிப் போட்டிருந்தாலும் எனக்குப் பிடிக்கும்மா. ஹோட்டல்கார பொண்ணுக்கு சமைக்கவா சொல்லித்தரனும்? நீயும் அது சம்பந்தமான படிப்பைத்தான் படித்தியாமே?”
அவருடன் பேசுவது இயல்பாக இருந்தது மகாலட்சுமிக்கு. இப்போதும் பாறை போல் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மாதவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.
“என்ன சம்மந்தி? இப்பத்தான் பொண்ணு வந்தாச்சே. இனி கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாமா?” ராஜசேகர் கேட்டார்.
“பார்க்கலாம் சம்மந்தி.”
அவர்கள் அதைப்பற்றி பேச ஆரம்பித்தனர். மகாலட்சுமிக்கு உள்ளே செல்வதா? இல்லை இங்கேயே தொடர்ந்து நிற்பதா? என்ற யோசனை. அதனால் கையைப் பிசைந்துகொண்டு அங்கேயே நின்றாள்.