(Reading time: 21 - 41 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

முகவாட்டத்தை உணர்ந்து தன் மனதறிய பொய் கூற முடியாமல் அவள் ஓரளவிற்கு உண்மையே கூறினாள்.

அதைக் கேட்ட பிறகு அவர் முகத்தில் கொஞ்சம் வெளிச்சம் வந்தது.

“இப்ப நான் அவனைப் பத்திப் பேசத்தான்மா வந்தேன்.”

“சொல்லுங்க சித்தப்பா. அவர் ஏதும் சொல்லிவிட்டாரா?”

“இல்லைம்மா. அவன் ஏதும் சொல்லலை. அவன் இது வரைக்கும் கஷ்டப்பட்டுட்டான். இனியும் சந்தோசமா இருக்கனும்ங்கிற ஆசையில் நான்தான் உன்னைப் பார்த்துப் பேச வந்தேன்.”

‘அவன் என்ன கஷ்டப்பட்டுட்டான்? அவன் என்னைத்தானே கஷ்டப்படுத்துகிறான்.’ மனதிற்குள்ளேயே புலம்பினாள்.

“அவன் தானாய் வளர்ந்த சுயம்பும்மா. அதனால் கொஞ்சம் கடினமா இருப்பான். அவனைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனால் நல்லவன்மா. அவனுக்கு நடிக்கத் தெரியாது. எதையும் மனதை விட்டு வெளியில் சொல்லமாட்டான். நானே புரிஞ்சுக்கிட்டு சில நேரம் அவனை பார்த்துப்பேன். ஆனால் அவனுக்கு முழுசா பாசத்தை என்னால் கொடுக்க முடியலைம்மா. என்னோட சூழ்நிலை புரிஞ்சு அவன் ஒதுங்கிட்டான். எங்கே கல்யாணம் பண்ணிக்காமல் அப்படியே இருந்துடுவானோன்னு நினைச்சு பயந்தேன். அதற்கேற்ற மாதிரி உன் வீட்டில் வந்து அவன் கிட்ட திருமணத்திற்குப் பேசும்போது அவன் வேண்டாம் என்றுதான் மறுத்திருக்கிறான். உன்னோட அப்பாவும், சித்தப்பாக்களும் என்னை வந்து பார்த்தாங்க. எனக்கும் அவன் சொன்ன மாதிரி அந்தஸ்து இடிச்சது. அப்பத்தான் உன்னோட ஜாதகமும், அவன் ஜாதகமும் பொருந்தியிருக்குன்னும், உன்னோட ஜாதகத்தில் தோசம் இருக்கிறதாவும், இவங்க கல்யாணம் நடந்தால் நல்லாருப்பாங்கன்னும் சொன்னாங்க. எனக்கும் அவன் நல்லாருக்கனும்னு தோணவே அவன்கிட்ட பேசி சம்மதிக்க வைத்தேன்மா.”

அவர் நீண்ட நேரம் அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டுத்தான் சென்றார். அவர் பேச்சிலேயே அவர் மாதவன் மீது எத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்று புரிந்தது.

அவள் அப்படியே அந்த பலகையிலேயே அமர்ந்துவிட்டாள். அவளுக்கு தன் தாய் சொன்னதையும், ராஜசேகர் சொன்னதையும் பேசியதை எல்லாம் கேட்ட பிறகு மாதவனின் மறுபக்கம் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிவதாக தோன்றியது.

ஆனால் என்னதான் யோசித்தாலும் அவன் தன் மீது கொண்டிருக்கும் அந்த வெறுப்பிற்கு மட்டும் அவளால் காரணத்தை உணர முடியவில்லை.

அவர்கள் திருமணம் நடந்தால் எத்தனை பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை அவள் உணர்ந்தாள். எப்படியும் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது என்பதை அவள் அறிவாள். இவன் வேண்டாம் என்று அவள் உறுதியாக மறுத்தாள் என்றால் வீட்டில் மறுக்க மாட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.