“லட்சுமி. அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர். இப்படி மரியாதை இல்லாமல் அவரை பேசக்கூடாது.” என்றாள்.
அவள் பேசுவதைக் கண்டால் அன்று நடந்ததை அவளிடம் சொல்ல விரும்பாதவளாய் தோன்றினாள்.
அப்படி என்னதான் நடந்திருக்கும்?
“சொல்லும்மா. அவர் அப்படி என்ன சொன்னார்?”
சொல்லாதவரைக்கும் மகள் மாப்பிள்ளையைத் தவறாகத்தான் எண்ணுவாள் என்று வளர்மதிக்குத் தோன்றவே, மகளும் இப்போது வளர்ந்துவிட்டாள் சொன்னால் புரிந்துகொள்வாள் என்று சொல்லிவிட நினைத்தாள்.
“என்னம்மா இத்தனை யோசனை? நான் ஐஸ் வாங்கி சாப்பிட்டேன். அதைத்தானே சொன்னார்?” என்றாள்.
“ஓ. அப்படி வேற நடந்துச்சா? அப்படி எத்தனை தடவை என்னை ஏமாத்தியிருக்கே?”
“அம்மா. அதற்குப் பிறகு நான் அப்படி செய்ததில்லைம்மா. இப்ப பேச்சை மாத்தாமல் சொல்லும்மா.”
“சொல்றேன்.” என்றவள் அன்றைய தினத்திற்கு சென்றாள். முகம் கல்லாய் இறுகிப்போனது.
“லட்சுமி. அந்த டிரைவர் நல்லவன் இல்லடா செல்லம். அவனை நம்பி உன்னை நாங்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருந்தோம். நல்லவேளை அவனோட கெட்ட எண்ணம் எங்களுக்கு மாப்பிள்ளை மூலமா தெரிய வந்துச்சு. இல்லைன்னா என்னவாகியிருக்குமோ?” என்று கூறியவளின் உடல் நடுங்கியது. மகளை அணைத்துக்கொண்டாள்.
“அம்மா. எனக்கு ஒன்னுமாகலை. நடந்தது என்னன்னு சொல்லும்மா.”
“அவன் உன்னோட குழந்தைத்தனத்தை பயன்படுத்தி உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்திருக்கான்மா.”
அதைக் கேட்டதும் அவள் அதிர்ச்சிக்குள்ளானாள். அவள் இது மாதிரி யோசித்ததேயில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் அது சரியானதுதான் என்பது போல் தோன்றியது.
அவன் வீதியோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ் வாங்கித் தருவான். அவளருகில் நெருங்கி அமர்ந்து கொள்வான். அப்போது அவள் விவரம் அறியாதவள். அனைவராலும் கொண்டாடப்பட்டவள். அவனும் அதே மாதிரி பாசத்தோடு இருக்கிறான் என்று தான் அவளும் நினைத்திருந்தாள். அவன் வேலையை விட்டு சென்ற போது ஐஸ் வாங்கிக் கொடுக்க ஆள் இல்லையே என்றுதான் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேறு கோணம் புரிந்தது.
“நல்லவேளை மாப்பிள்ளை தம்பி அவனோட கெட்ட எண்ணத்தை புரிஞ்சுக்கிட்டார். அவனை அடித்து விரட்டிவிட்டு உன்னைத் தனியே விட மனமில்லாமல் அவரே காரை ஓட்டிவந்தார். அவர் வந்து