“மேடம். எடுத்துக்குங்க மேடம்.” பவ்யமாய் நீட்டினாள்.
அவள் இரண்டு தம்ளர்களில் பழச்சாறு வைத்திருந்தாள்.
“என்னது?”
“மாதுளை ஜூஸ்தான் மேடம்.”
“இல்லை. நான் வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை.” சொல்லும்போது தன் அன்னைக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டாள். அவள் இப்போது உண்மையைத்தானே கூறினாள்.
அந்த வரவேற்புப் பெண் தயக்கமாகக் கூறினாள்.
“உனக்குத்தான் மாதுளை ஜூஸ் பிடிக்குமே மகா. அதுதான் கொண்டு வரச்சொன்னேன். அதில் ஐஸ் போடலை. அதனால் தைரியமா குடிக்கலாம். வருங்கால முதலாளியம்மாவுக்காகன்னு வாங்கிட்டு வந்துட்டா. நீ சாப்பிடலைன்னா அவளுக்கு வருத்தமாயிருக்கும்ல. பயப்படாமல் குடிம்மா.” என்றான் மென்மையான குரலில்.
அவள் மயக்கம் போடாத குறையாக அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அவன் பார்வையிலும் மென்மை. தன் ஆருயிர் காதலியை பார்ப்பது போல் அப்படி ஒரு மென்மையான அந்த பார்வையைக் கண்டு அவள் பல்லைக் கடித்தாள்.
அந்தப் பெண் தனக்காக காத்திருக்கிறாள் என்று சிரித்தவாறே நன்றியுரைத்துவிட்டு எடுத்துக்கொண்டாள்.
அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அவளுக்குக் கொடுத்துவிட்டு மாதவனிடம் நீட்டினாள்.
“தேங்க்ஸ்.” என்று அவளிடம் அவனும் நன்றியுரைத்தான். அவள் நாகரிகம் கருதி உடனே வெளியில் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதுமே அவன் முகம் மாறியது.
“இளிச்சுக்கிட்டு எவனோ ஒருத்தன் உடம்புக்கு கெடுதலான ஐஸ் வாங்கிக் கொடுக்கும்போது சாப்பிட முடிந்தது. இப்ப கட்டிக்கப்போறவன் மாதுளை ஜூஸ் வாங்கிக் கொடுத்தால் சாப்பிடக் கசக்குதா?” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டே.
‘ஆக அவன் எதையுமே மறக்கவில்லை. இவனுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? நான் அப்போது கூட அவனிடம் தலையில் குட்டு வாங்கிக் கொண்டுதானே இருந்தேன். அம்மா அப்பாவிடம் கூட எதையும் கூற முடியாமல் இவனேதானே ஏதோ கூறினான். நான் அப்போதே இவனை மாட்டிவிட்டிருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டேன். இப்போது இந்த நிலைமையில் தள்ளியிருக்கிறான். இப்போது வரை அவன்தானே என்னை முறைத்துக்கொண்டும், திட்டிக்கொண்டுமிருக்கிறான். இதில் எந்த இடத்தில் நான் அவனிடம் பணக்காரத்திமிருடன் நடந்துகொண்டேன்?’