தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு
மகாலட்சுமி விக்கித்துப் போய் நின்றாள். எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் தங்கள் அறைக்குச் சென்றாள்.
அடித்தது ஒருபக்கம் வலித்தது என்றால், எதற்காக அப்படி நடந்துகொண்டான் என்று காரணம் தெரியாதது மறுபக்கம் வலித்தது.
அவளிடம் இது வரைக்கும் இப்படி யாரும் நடந்துகொண்டதில்லை. வீட்டிலே அவள் மகாராணியாகதான் வலம் வந்தாள். மற்றவர்கள் அவளை எளிதில் நெருங்க முடியாது எனும்போது அவளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
அவளும் யார் மனமும் வருந்தும்படி நடந்துகொண்டதில்லை. அதனால் அவளை எல்லோரும் கொண்டாடத்தான் செய்தனர்.
மற்றவர்களின் அன்பை மட்டுமே உணர்ந்தவள் மாதவனின் வெறுப்பை தாங்கமுடியாமல் தவித்தாள்.
அவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தாள்தான். ஆனால் இப்போது அவன் அவள் கணவனாகி விட்டான். அவள் மனதில் யாரும் இல்லாததால் அவளால் திருமணம் ஆன உடன் அவனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது.
காரணமே இல்லாமல் அவன் வெறுப்பதற்கு பின்னணி என்னவாக இருக்கும்? எந்த நேரத்திலாவது அவன் மனதை காயப்படுத்தியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தாள். அவனைப் பார்த்த ஒரு சில கணங்களும் அவன்தான் அவளிடம் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறானே தவிர, அவள் அவனை காயப்படுத்தியதில்லை. அதன் பிறகும் அவன் ஏன் அப்படி நடந்துகொள்ள வேண்டும்?
அவன் ஏதாவது அவளைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருந்தால், அதை வாயைத் திறந்து சொன்னாலாவது அவளால் விளக்கம் கொடுக்க முடியும்?
படித்திருந்தும் காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறவனை எப்படி கையாள்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
அவள் பிரச்சினை என்றால் ஒதுங்கிப்போகும் ரகம். யாரிடமும் வம்பு செய்யமாட்டாள். ஆனால் கணவனிடம் பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கிப்போக முடியாதே.
அவள் வீட்டினர் அமைத்து கொடுத்த வாழ்க்கை. அதை அவள் நல்லபடியாக வாழ வேண்டும்.
அதுதான் அவள் தன் வீட்டினருக்கு கொடுக்க கூடிய சந்தோசம். அதை அவள் தன் கடமையாகவும் நினைத்தாள்.
எல்லோருக்கும் திருமண வாழ்வு நன்றாக அமைந்துவிடுவதில்லை. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கூட தங்கள் காதலை மறந்து நீதிமன்றத்தின் வாசலில் விவாகரத்து வேண்டி நிற்பது ஏராளமாகிவிட்டது.