வேறு என்ன சொல்ல முடியும்? அவனைப் புரிந்துகொள்ள முடியாமல் அவனோடு போராடிக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறு நினைவு ஏதும் வரவில்லை என்று அவளால் எப்படி தோழியிடம் கூற முடியும்? அவளும் தோழிக்கு ஏதோ பிரச்சினை என்று கவலை கொண்டு அவள் வீடினரிடம் சொல்லிவிட்டால்? அதுவும் சுகன்யா வளர்மதிக்கு பிரியமானவள். அதனால் கண்டிப்பாக அவள் வளர்மதியிடம் கூறத்தான் செய்வாள்?
முகத்தை கழுவிவிட்டு அவன் காபி போட்டு வருவதற்குள் அம்மாவின் மடியில் தலை சாய்க்கவேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அவள் யோசித்துக்கொண்டே நின்றதில் அவன் முந்திக்கொண்டான்.
அவர்கள் வெளியில் செல்லும்போது அவன் வளர்மதியிடம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தான். அவளால் நம்பவே முடியவில்லை.
இவன் இப்படி கூட சிரித்துப்பேசுவான் என்பது அவர்கள் மற்றவர்கள் முன் இருக்கும்போதுதான் தெரிகிறது.
அன்னையின் அருகில் அமரும் எண்ணத்தில் அவள் சென்றபோது அவன் குறுக்கிட்டான்.
“மகா. இன்னும் தூக்கம் கலையலையாடா? நீ ஒரே கவலையா இருந்தியா? அதான் அத்தைக்கிட்ட சொன்னேன். வா வா. இந்தா காபியை எடுத்துக்கோ. கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கும்.” என்று தன்னருகில் அமர்வதற்கு இடத்தைக் காண்பித்தான்.
அவளும் வளர்மதிக்கு முன் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் அவன் சொன்னதை தட்டாமல் செய்தாள்.
வளர்மதியின் அருகில் சுகன்யா அமர்ந்துகொண்டாள்.
“பார்த்தீங்களாம்மா. இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்ன லட்சுமி இப்ப எப்படி மாறியாச்சு பார்த்தீங்களாம்மா?” என்று வளர்மதியிடம் தோழியைப் பற்றி குறைபட்டுக்கொண்டாள் சுகன்யா.
சமய சந்தர்ப்பம் தெரியாமல் இவள் வேறு பேசி வைக்கிறாளே என்று இருந்தது மகாலட்சுமிக்கு. ஒருவேளை தான் கல்யாணத்திற்கு மறுத்ததை அன்று கேட்டானே அதனால்தான் அவன் தன் மீது கோபமாக இருக்கிறானா? அவளுக்கு மனம் குழம்பியது. யாராக இருந்தாலும் தன் தன்மானத்திற்கு ஒரு சோதனை வரும்போது கோபப்படத்தான் செய்வார்கள். அதனால்தான் அப்படி நடந்துகொள்கிறானா? அவள் யோசனையுடன் கணவனைப் பார்த்தாள்.
“லட்சுமி. இது சரியில்லை. நானும் அம்மாவும் உன்னை ஆசையா பார்க்க ஓடி வந்தால் நீ அண்ணாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கிட்டிருக்கே. நாங்களும் வந்திருக்கக்கூடாதுதான். என்னவோ அண்ணா நீ வீட்டு நினைவில் கவலையா இருக்கியேன்னு சொன்னப்ப எங்களால் தாங்கிக்க முடியலை. அதான் அம்மா என்கிட்ட பேசின உடனே நானும் வர்றேன்னு வந்தேன். நானும்