அங்கே புரிதல் குறைந்துவிட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து, தான் என்ற எண்ணம் அதிகமாவதால் திருமண ரத்து வரை சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு அதனால் வரும் பாதிப்பை விட, அவர்களின் வாரிசுகள் படும் வேதனைதான் அதிகம்.
பிள்ளைகளுக்காக கணவனையோ, இல்லை மனைவியையோ சகித்துக் கொண்டும் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.
படிக்காத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மனைவியை அதன் பிறகு படிக்க வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அவளுடன் அப்படி ஒருத்தி கல்லூரியில் படித்தாள்.
அவளுக்கு பன்னிரண்டாம் வகுப்பிலேயே திருமணம் ஆகிவிட்டதாம். அதன் பிறகுதான் அவள் கல்லூரி படிப்பிலேயே சேர்ந்தாள். படிப்புக்கிடையிலேயே குழந்தைகளும் பிறந்தனர்.
இரண்டு ஆண் குழந்தைகள். இளங்கலை மட்டுமல்லாது, முதுகலை படிப்பிலும் சேர்ந்தாள். கூடவே தட்டச்சு, சுருக்கெழுத்து, போட்டித்தேர்வுகள் என்று அவள் கணவன் அவளுக்கு உறுதுணையாக இருந்தான். அவள் முதுகலை படித்து முடிப்பதற்குள் எழுதிய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலைக்குச் சென்றுவிட்டாள்.
அப்படியும் இருக்கிறார்கள். நிறைய படித்த பெண்களை மணந்த சிலர் மனைவி தன்னை மீறி போய்விடுவாள் என்ற பயத்தில் அவளை அடக்கி ஆள நினைத்து வீட்டிற்குள்ளேயே அவளது திறமையை முடக்கிப்போட்டுவிடுகின்றனர்.
ஆணோ, பெண்ணோ தன்னுடைய துணையைப் பற்றிய நம்பிக்கை கொள்ளவேண்டும். தனக்காக மற்றவர் இருக்கிறார் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
ஒருசிலர்தான் புரிதலோடு வாழ்க்கையை அழகான கவிதையாக மாற்றிக்கொள்கின்றனர்.
அவன் கிழித்துப்போட்டுவிட்டுச் சென்ற புத்தகத்தின் துணுக்குகளை கூட சுத்தம் செய்யாமல் அப்படியே படுத்தவள் உறங்கிவிட்டாள். ஆனால் தன்னை மறந்து கூட அவள் கண்ணீர் வடிக்கவில்லை. தன்னையறியாமல் உறங்கியவள் கண்ணை விழித்தபோது மாலையாகிவிட்டிருந்தது. எழுந்து பார்த்தபோது வீடு சுத்தமாக இருந்தது. அதன் பிறகு அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான். வீட்டை சுத்தம் செய்திருக்கிறான்.
செய்யட்டும். அவன்தானே கிழித்துப்போட்டான் என்று அவளுக்குத்தோன்றியது. அவன் வந்து சென்றது கூட அறியாமல் அவள் உறங்கியிருக்கிறாள். அவனும் அடித்துவிட்டோமே என்று அவளை எழுப்பி செய்ததை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனால் அவள் என்ன தவறு செய்தாள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?
அழைப்பு மணி ஒலித்தது. இப்போது மட்டும் அவளை அழைக்க வேண்டுமா? முன்பு மாதிரியே